ஒன்இந்தியா செய்தி எதிரொலி.... செய்தித்துறை இணையதளத்தில் முதல்வர் பெயர்...கருணாநிதி கேள்வி
கரூர்: தமிழக அரசின் செய்தித்துறை இணையதளத்தில் முதல்வர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெயரே இன்னும் தொடர்கிறது என்று ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. தற்போது இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதா என்றும், பொதுப்பணித்துறை, நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீிர் செல்வம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா தான் இருப்பது போல அந்த இணையதளம் உள்ளது.
இது குறித்து கருணாநிதி கேள்வி எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஜெ.வின் வழி காட்டுதலில்
ஜெ.வின் வழி காட்டுதலில் தான் தமிழக அரசு இயங்குகிறதுங்கிற தோற்றத்தை உருவாக்கக் கூடாது" என்பதாகும். ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் காரியங்கள் என்ன?
பாலி நாரின் சொன்னது
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதி மன்றம் நான்காண்டு சிறை தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறிய பிறகு, தங்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டுமென்று உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்த போது, ஜெயலலிதாவுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், நீதிமன்றம் எந்த நிபந்தனை விதித்தாலும் ஏற்கத் தயார் என்றும், ஜாமீனில் விடுவித்தால் போதும் என்றும் உச்ச நீதி மன்றத்தில் உறுதி கொடுத்ததோடு, ஜாமீன் கிடைத்த பிறகு, நாரிமன் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முயன்று பார்க்க நேரம் கிடைக்காத நிலையில், ஜெயலலிதா என்னென்ன நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டுமென்று கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
எட்டு கண்டிஷன்களில் ஒன்று
அந்த எட்டு கண்டிஷன்களில் ஐந்தாவது கண்டிஷன் தான் "ஜெ.வின் வழி காட்டுதலில் தான் தமிழக அரசு இயங்குகிறதுங்கிற தோற்றத்தை உருவாக்கக் கூடாது" என்பதாகும். ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் காரியங்கள் என்ன?
அரசின் இணையதளத்தில்
தமிழக அரசின் செய்தி - மக்கள் தொடர்புத் துறையின் இணைய தளத்தில் இன்றைய தினத்தில் தமிழக அமைச்சரவையில் யார் யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் தமிழக முதலமைச்சர் யார் என்பதற்கு "செல்வி ஜெ. ஜெயலலிதா, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்" என்றும்; "திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர்" என்றும் தான் இன்றளவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருந்துக்குக் கூட முதல்வர் படம் இல்லை
ஜெயலலிதா பிறந்த நாள் அன்று தமிழகஅரசின் செய்தி, மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி ஒன்று நடந்தது. அதில் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் படம் மருந்துக்குக் கூடக் கிடையாது. மாறாக ஜெயலலிதா படம் தான் நிறைந்திருந்தது. தமிழக அரசின் முக்கியமான துறை களில் ஒன்றான செய்தி, மக்கள் தொடர்புத் துறை சார்பிலே வெளியிடப்படம் இணைய தளத்திலேயே இந்தத் தவறு களையப்படாததற்குக் காரணம், அந்தத் துறையின் அமைச்சரா? அதிகாரிகளா? நம்மைக் கேள்விக் கேட்க யார் இருக்கிறார்கள் என்ற இறுமாப்பு தான் இந்தத் தவறுக்குக் காரணமா?
போற்றுதலுக்குரிய மாண்புமிகு அம்மா!
இன்னும் சொல்ல வேண்டுமேயானால், இந்த ஆண்டு முதல் அமைச்சர், பன்னீர்செல்வம் 25-3-2015 அன்று சட்டப் பேரவையில் படித்த நிதி நிலை அறிக்கையில் பத்தி 129இல் "போற்றுதலுக்குரிய மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும், அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது" என்று எழுதப்பட்டுள்ளது.
குற்றம் புரிந்தவர்
தமிழக அரசின் சார்பில் வைக்கப்படும் நிதி நிலை அறிக்கை, குற்றம் புரிந்தவர் என்று நீதி மன்றத்தினால் தண்டிக்கப்பட்ட ஒருவருடைய வழி காட்டுதலின்படி தயாரிக்கப்படலாமா? நிதி நிலை அறிக்கை என்பது அரசுப் பொறுப்பிலே இருப்பவர்கள் ரகசியமாக வெளியார் யாருக்கும் தெரியாமல் தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அந்த அறிக்கையினை ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி தயாரித்ததாக, தமிழக முதல் அமைச்சர் பன்னீல்செல்வமே நிதி நிலை அறிக்கையில் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றால், இவர் ஏற்றுக் கொண்ட ரகசியக் காப்பு உறுதி மொழியை மீறியிருக்கிறார் என்று தானே பொருள்?
முற்றிலும் மாறாக
ஜெ.வின் வழி காட்டுதலில் தான் தமிழக அரசு இயங்குகிறது என்னும் தோற்றத்தை உருவாக்கக் கூடாது என்று உச்ச நீதி மன்ற விசாரணையின் போது, ஜெயலலிதாவின் வழக்கறிஞரே ஒப்புக் கொண்ட நிலையில், தற்போது அந்த நிபந்தனைக்கு முற்றிலும் மாறாக நிலைமை செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பது சரியானது தானா?
உச்சநீதிமன்றம் கவனிக்க வேண்டும்
எனவே இந்தப் பிரச்சினைகள் குறித்து ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கொடுத்த உச்ச நீதி மன்றமும், சட்டம் பயின்றோரும், சட்டத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்போரும் தான் முடிவுக்கு வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் கருணாநிதி.