வேறு பெண்ணின் பெயரை பச்சை குத்திய விவகாரம்; மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது
கிருஷ்ணகிரி: மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக கிருஷ்ணகிரி போலீசார் கணவரைக் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி நகரிலுள்ள மேல் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(26). இவரது மனைவி சத்யா (22). இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன் சதீஷ் தனது மார்பில் ரூபா என்ற பெயரை பச்சைக் குத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சத்யா, ரூபா யாருடைய பெயர் என விசாரித்துள்ளார். ஆனால், இதற்கு சதீஷ் சரிவர பதில் அளிக்கவில்லை.
இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சத்யா, வீட்டில் இருந்த விஷ மருந்தைத் தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
மயங்கிய நிலையில் கிடந்த சத்யாவை, அக்கம்பக்கத்தார் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் தேவிகாராணி, மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் சதீஷ்குமாரை கைது செய்தனர்.