மாநகராட்சி வளாகத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வழி இல்லையே... தவிக்கும் வேலூர் பெண்கள்
வேலூர்: வேலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு கைக் குழந்தைகளுடன் வருகின்ற தாய்மார்கள், பெண் ஊழியர்கள் கைக்குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க சரியான இடவசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.
கடந்த 2009 இல் வேலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அதற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்துக்கு பிறப்பு இறப்பு சான்றிதழ் வாங்க, வரி கட்ட தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள், அதிகாரிகள், ஊழியர்கள் வருவதால் மாநகராட்சி வளாகம் பரபரப்பாகவே காணப்படும்.
பரபரப்பாக உள்ள இம்மாநகராட்சி வளாகத்தில் பெண்களுக்கு தேவையான வசதிகள் சுத்தமாக இல்லை. தினமும் குழந்தைகளோடு சான்றிதழ் வாங்க 50 பெண்களாவது மாநகராட்சி அலுவலகத்துக்கு குழந்தையோடு வருகின்றனர்.
வந்தால் உடனே வேலை முடிவதில்லை. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. காத்திருக்கும் நேரத்தில் திடீரென குழந்தை பசியால் அழுதால் பால் தருவதற்கு இட வசதியில்லாமல் இளம் தாய்மார்கள் தவிக்கின்றனர். மறைவான இடத்துக்கு சென்று குழந்தைக்கு பால் தந்து கொண்டு வருகின்றனர்.
பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் குழந்தைக்கு பால் வழங்க தனி அறை ஒதுக்கியது போல மாநகராட்சி அலுவலகங்களில் தனியாக ஒரு அறை ஒதுக்கினால் சிறப்பாகயிருக்கும் என்பது இளம் தாய்மார்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.