தமிழகத்தில் மாவோயிஸ்ட் ஸ்லீப்பர் செல்கள்: முக்கிய தலைவர்களை கொல்ல சதி திட்டம்?
சென்னை: தமிழகத்தில் தளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மாவோயிஸ்ட்டு இயக்கத்தினர் ஸ்டீலமுக்கிய தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்கள் பதுங்கியிருப்பதை கடந்த பிப்ரவரி மாதவே க்யூ பிரிவு போலீஸார் உறுதி செய்து எச்சரித்தனர். தமிழகத்தில் தருமபுரி, தேனி மாவட்ட காட்டுப் பகுதிகளில் இருந்த நக்சலைட்கள் இப்போது சென்னையில் ஊடுருவி, தங்கள் அமைப்பின் வேலைகளை தீவிரமாக செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மாவோயிஸ்ட் அமைப்பின் தமிழக தலைவர் என கூறப்படும் விவேக் (எ) பாலன் (எ) குமார் (45) ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது மனைவியுடன் சென்னை ஷெனாய் நகருக்கு வந்திருந்தபோது கியூ பிரிவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீபெரும்புதூரில் பதுங்கி இருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் முகேஷ் யாதவ் என்ற சுரேந்திர யாதவ் (33) கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநில மாவோயிஸ்ட்டுகள் தலைவன் விக்ரம் கவுடா தலைமையில் ஒரு பெண் உள்பட 5 மாவோயிஸ்ட்டுகள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக கியு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை, நீலகிரி, உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
மாவோயிஸ்டுகள் கைது
சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பை பகுதியில் தங்கியிருந்த ஜாஸ்மேரி என்ற பெண் மாவோயிஸ்ட்டை போலீசார் கைது செய்தனர். இவர் கடந்த 2002ம் ஆண்டு ஊத்தங்கரை அருகே போலீசுடன் துப்பாக்கி சண்டை நடத்தியவராவார். இவர் அளித்த தகவலின் பேரில் ஊத்தங்கரை சம்பவத்தில் தொடர்புடைய கலா, சந்திரா என்ற மேலும் இரண்டு மாவோயிஸ்ட்டுகளை கரூரில் போலீசார் கைது செய்தனர்.
ஸ்லீப்பர் செல்கள்
இருவரும் கரூரில் துணி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இதில் கலா என்பவர் மாவோயிஸ்ட்டுகள் இயக்கத்தில் முக்கிய நபராக இருந்து தமிழகம் மற்றும் கேரளாவில் ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. இவரது தலைக்கு ரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
மாவோயிஸ்டுகளாக மாற்ற முயற்சி
இதே போல வேலை செய்து கொண்டே மாவோயிஸ்ட் அமைப்பிற்கு அப்பாவி இளைஞர்களையும், இளம் பெண்களையும் மூளைச்சலவை செய்து மாவோயிஸ்ட்டுகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா 3 மாநில எல்லையிலர் மிகப்பெரிய அளவில் பயிற்சி முகாம் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
சிறையில் அடைப்பு
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் மாவோயிஸ்ட்டு இயக்கத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 2 பெண் மாவோயிஸ்ட்டுகளையும் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கலாவும், சந்திராவும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான மாவோயிஸட்டுகளை தேடி வருகின்றனர்.
போலீஸ் என்கவுண்டர்
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வனப் பகுதியில் 2002ம் ஆண்டு ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட 32 நக்சலைட்களில் 29 பேரை போலீஸார் கைது செய்தனர். சிவா என்கிற பார்த்திபன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாரதி, தசரதன் ஆகியோர் மட்டும் தப்பிச் சென்றனர். இருவரையும் தமிழக போலீஸால் இன்று வரை பிடிக்க முடியவில்லை.
சென்னையில் பதுங்கல்
ஊத்தங்கரை ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் வெளிவந்த பொடா பத்மா தலைமறைவானார். பெண் நக்சலைட்களான பாரதி, பத்மா ஆகியோர் சென்னையில் தலைமறைவாக இருக்கின்றனர் என்ற தகவல் கிடைக்க தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது.
குடியும் குடித்தனமுமாய்
தென் மாநிலங்களில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவராக செயல்பட்ட விவேக்கை 2012ம் ஆண்டு சென்னை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். அதன் பின்னரே, விவேக்கும், பத்மாவும் திருமணம் செய்து சென்னையில் ஒரு வீட்டில் வசித்தது தெரியவந்தது.
சென்னை மீட்டிங் பாயிண்ட்
தமிழகத்தில் தருமபுரி, தேனி மாவட்ட காட்டுப் பகுதிகளில் இருந்த நக்சலைட்கள் இப்போது சென்னையில் ஊடுருவி, தங்கள் அமைப்பின் வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றனர். நக்சல்களுக்கு தேவையான பணம் மற்றும் பொருட்களை சேகரிப்பதையும் தொடங்கியுள்ளனர். நக்சல்கள் சந்திக்கும் இடமாகவும் சென்னையை பயன்படுத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு தீவிரம்
நக்சல், மாவோயிஸ்ட்களை கட்டுப் படுத்த வட மாநிலங்களில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதால் அவர்கள் தலைமறைவாக இருப்பதற்கு தமிழகத்தை தேர்ந்தெடுக்கின்றனர். தமிழகத்தில் நக்சல்கள் வளர்வதற்கு இதுவே முதல் காரணம். இதைக் கட்டுப்படுத்த, வெளி மாநிலத்தவர்களை கணக்கெடுக்கும் பணியை மீண்டும் தொடங்கி, தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.