ஜெ. குறித்த கருத்துக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.. எஸ்.பி.வேலுமணி ஆவேசம்
ஜெயலலிதா குறித்த கருத்துக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த கருத்துக்கு தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஊரக வளர்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி தமிழக அரசின் சார்பில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நேற்று முன்தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.
இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற குற்றவாளி ஒருவரின் பெயரில் அரசுத் திட்டங்கள் தொடங்குவதை ஏற்க முடியாது என தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மேலும் தலைமை செயலகம், அமைச்சர்கள் அறை, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஜெயலலிதா படம் வைக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை செயலாளரிடம் ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஊரக வளர்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தவர். இந்திய தேசத்தையே தமிழகத்தின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர். பல்வேறு நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்காக செய்தவர். அவர் செய்த திட்டங்களை அவரது படம் போடாமலேயே அவரது பெயர் சொல்லும். இருந்தாலும் அவரை குற்றவாளி என்று ஸ்டாலின் கூறுவது தவறு. அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.