டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக நலன்களை முன்வைக்காத எடப்பாடிக்கு ஸ்டாலின் கண்டனம்!
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக நலன்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக நலன்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதுவுமே பேசவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் பேசவில்லை. வங்கிக்கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றோ வறட்சி நிவாரணத்துக்கு தமிழக அரசு கோரி நிதி முழுவதையும் தர வேண்டும் என்றோ பிரதமர் மோடிக்கு முதல்வர் அழுத்தம் தரவில்லை.
மேலும் பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்டவை தமிழக நீர்ப்பாசனம் பாதிக்கும வகையில் தடுப்பணை கட்டுவது குறித்தோ, அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்ற என்ன நடவடிக்கை என்பது குறித்தோ மத்திய அரசின் கவனத்திற்கு முதலமைச்சர் எடுத்துச் செல்லவில்லை. தமிழகத்தை அதிமுக அரசு கடன்சுமையில் தள்ளியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த கடன் சுமையை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் நடவடிக்கைகளை கோரும் முயற்சிகளை முதல்வர் எடுக்கவில்லை.
இவ்வாறு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.