தினகரனை விட்டுக் கொடுக்காமல் முட்டுக் கொடுக்கும் நாஞ்சில் சம்பத்!
அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை விட்டுக் கொடுக்காமல் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் முட்டுக் கொடுத்து பேசி வருகிறார்.
சென்னை: அதிமுகவில் அசாதாரண சூழல் உருவாகியுள்ளதால் அதனை சமாளிக்கும் வல்லமை டிடிவி தினகரனுக்குத்தான் உள்ளது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அதிமுகவில் அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. இதுபோன்ற ஆபத்துக்களை எல்லாம் சவால்களை எல்லாம் கடந்துதான் ஒரு தலைமை தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட வல்லமையுள்ள தலைமை டிடிவி தினகரன்.
லட்சக்கணக்கான தொண்டர்களுடைய மனஉலைச்சல்களுக்கு மருந்திடுகின்ற வகையில் இன்று பிற்பகல் கூடுகின்ற மாவட்ட செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நல்ல முடிவை தினகரன் அறிவிப்பார்.
குடும்பம் நிராகரிப்பு
அமைச்சர்கள் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்தக் கட்சிக்காக 33 ஆண்டு காலம் ஜெயலலிதாவை நிழலாக தொடர்ந்த சசிகலாவின் குடும்பத்தை நிராகரிக்க வேண்டும் என்ற முடிவு, அவர் சிறையில் உள்ள இந்த நிலையில் எடுத்திருப்பது மனிதாபிமானமுள்ளவர்களின் நெஞ்சை தொடுகிறது.
பாஜகதான் காரணம்
அதே நேரத்தில், அவர்கள் அப்படி ஒரு முடிவை எடுக்கத் தூண்டப்பட்டார்கள். இந்த அழுத்தத்தை கொடுத்தது பாஜகதான். இரட்டை இலை சின்னம் முடக்குவதற்கு முன்பே சின்னம் இவர்களுக்கு கிடைக்காது என்று பாஜகவினர் சொன்னார்கள். அதிமுக இருக்காது என்று பாஜகவினர் சொன்னார்கள். அதிமுக அழிந்துவிட்டது என்று பாஜக அறிவித்தார்கள்.
தமிழிசை பந்தயம்
பாஜக தலைவர் தமிழிசை, என் நண்பர் ஒருவரிடம் , அதிமுக ஆட்சியை கவிழ்த்துவிடுவோம் என்று பந்தயம் கட்டி இருக்கிறார். அந்த நண்பர் அவரிடம் அதற்கான சாத்தியம் இல்லை என்று விவாதித்திருக்கிறார். ஆனால் இல்லை உறுதியாக அதைச் செய்வோம் என்று தமிழிசை கூறியிருக்கிறார்.
ஜெ.வின் கோட்டை
ஆக, இந்தியா முழுவதையும் அவர்களுடைய கொடியை பறக்கவிட வேண்டும் என்று பாஜகவினர் ஆசைப்படுகிறார்கள். தமிழகம் காலம் காலமாக ஒரு தீவாகத்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது. இது பெரியாரின் பூமி. அண்ணாவின் நந்தவனம். எம்ஜிஆரின் தோட்டம். ஜெயலலிதாவின் ஆஸ்பெக்டாஸ் கோட்டை.
கலாச்சார யுத்தம்
திராவிட இயக்க பூமியில் வகுப்புவாத சக்திகள் காலுன்றுவதற்கான வாய்ப்பில்லை. இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற யுத்தம் கலாச்சார யுத்தம். இதில் எங்கள் அணி சார்பில் டிடிவி தினகரன் தலைமை தாங்குகிறார். இறுதி வெற்றி எங்களுக்குத்தான்.
பாஜகவின் அநாகரிகம்
பாஜகவினர் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறார்கள். வருமானவரித்துறையை பயன்படுத்துகிறார்கள். பவர் செக்டர், சென்டர் என அனைத்தையும் பயன்படுத்தும் மோசமான காரியத்தை பாஜக செய்து வருகிறது. இது நாகரிகமான நடவடிக்கை அல்ல.