பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு அடம்பிடிக்கும் ஓபிஎஸ்: நாளை இபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை
சென்னை: முதல்வர் பதவி யாருக்கு, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி யாருக்கு என்பது உள்ளிட்டவை குறித்து தீர்மானிக்க ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
அதிமுகவின் இரு அணிகள் சேர பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி.
முதல்வர் பதவி தனக்கு வேண்டும் என்கிறாராம் ஓபிஎஸ். சசிகலா குடும்பத்தாரின் தலையீடு இருக்கக் கூடாது, ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற இரண்டு நிபந்தனைகளை முன்வைத்துள்ளார் ஓபிஎஸ்.
இந்நிலையில் இரு அணிகளை இணைப்பது குறித்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் அவர் அணியினர் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள்.
நாளை ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறப்படுகிறது. நாளைய பேச்சுவார்த்தையில் முதல்வர் பதவியை ஓபிஎஸ்ஸுக்கு கொடுத்துவிட்டு எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணி எதிர்பார்க்கிறது.
கட்சியின் பொதுச் செயலாளர் பதவி குறித்தும் நாளை முடிவு செய்யப்படுமாம்.