ஓபிஎஸ் போல எனக்கு நடிக்கத் தெரியாது.. சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சால் சலசலப்பு
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஸ்கார் வாங்கும் அளவுக்கு நடிக்க முடியாது என நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போல தனக்கு நடிக்கத் தெரியாது என்றும் அவரைப் போல ஆஸ்கர் விருது வாங்கும் அளவுக்கு நடிக்க முடியாது என்றும் சட்டசபையில் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார். இதற்கு ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின் தமிழக சட்டசபையின் பொது விவாத கூட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இதில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் உதயசூரியன் பேசுகையில், அண்ணா, கருணாநிதி, க. அன்பழகன் போன்றோர் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வந்த காட்சியைப் பார்த்திருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் வந்தபோதும் பார்த்திருக்கிறோம். எல்லோரும் சாதாரணமாக நிதிநிலை அறிக்கையை எடுத்து வந்துதான் தாக்கல் செய்துள்ளதாக கூறி தற்போதைய நிதியமைச்சர் ஜெயக்குமார் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததை குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் ஜெயக்குமார், ''முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பற்றி திமுக உறுப்பினர் இங்கே குறிப்பிட்டார். அவரைப் போல ஆஸ்கர் விருது வாங்கும் அளவுக்கு என்னால் நடிக்க முடியாது'' என்றார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எஸ்.செம்மலை, கே.பாண்டியராஜன், ஓ.கே.சின்னராஜ் உள்ளிட்டோர் எழுந்து நின்று கோஷமிட்டனர். அமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்களை பேச பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை.
அப்போது திமுக உறுப்பினர் சிலர் எழுந்து அமைச்சர் பேசியது தவறு எனக் குறிப்பிட்டனர். அப்போது குறுக்கிட்ட பேரவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன், ''ஓபிஎஸ்ஸுக்கு திமுக உறுப்பினர்கள் வக்காலத்து வாங்குவது ஏன்?'' என கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.