ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ரத்தம் சிந்தினேன் - இயக்குநர் கவுதமன் ஆவேசம்
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர உரிமை கிடைக்கும் வரை போராட வேண்டும் என்று இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் ரத்தம் சிந்தினேன் என்று இயக்குநர் கவுதமன் கூறியுள்ளார்.
தமிழர் திருநாளான பொங்கல் விழாவையொட்டி தமிழர்களின் பழமையான விளையாட்டான "ஏறு தழுவுதல்" என்னும் ஜல்லிக்கட்டு வருடம் தோறும் நடைபெறும். இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் இந்தாண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதையடுத்து ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கடந்த ஒருவாரகாலமாக இரவு பகலாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் பணிந்த தமிழக அரசு அவசர சட்டம் நிறைவேற்றியுள்ளது. ஆனால் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடைபெற வகை செய்யும் சட்டம் நிறைவேற்றும் வகையில் போராட்டத்தை கைவிட போவதில்லை என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவர்கள், இளைஞர்கள் 2 மாத காலத்திற்கு தற்காலிகமாக தள்ளி வைக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர் கார்த்திகேய சிவனோபதி அம்பலத்தரசு, ராஜேஷ், ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தநிலையில் இயக்குநர் கவுதமன் கூறுகையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ரத்தம் சிந்தி போராடினேன். இரவு பகலாக பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பட்ட மக்களும் போரடி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர உரிமை கிடைக்கும் வரை போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய போது இயக்குநர் கவுதன் மீது போலீசார் தடியடி நடத்தியது குறிப்பிடத்தக்கது.