வளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை: தந்தை இறந்து விட்டால், வளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நிஜிஸ் ஆர்சிபால்டு. இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், என் தந்தை ஆலிவர் சமர் சில்பாலெட். தாயார் விர்ஜின் இனிகோ. 2000-ம் ஆண்டு என் தந்தை இறந்து விட்டார்.
இந்தநிலையில் 2002-ம் ஆண்டு என் தாயார் ஜெரால்டு ஞானரத்தினம் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். நான் ஏற்கனவே வாங்கி இருந்த பாஸ்போர்ட்டில் என் தந்தை பெயர் இருந்தது. என் தந்தை இறந்த பின்பு பெற்ற ஆதார் கார்டு மற்றும் கல்வி சான்றிதழ் போன்றவற்றில் என் வளர்ப்பு தந்தை ஜெரால்டு ஞானரத்தினம் பெயர் உள்ளது.
இந்தநிலையில் என் பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டது. இதனால் பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரும்படி மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பித்தேன். "ஏற்கனவே நான் பெற்ற பாஸ்போர்ட்டில் என் தந்தை பெயர் உள்ளது.
தற்போது நான் அளித்துள்ள விண்ணப்பம் மற்றும் ஆவணங்களில் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டிய இடத்தில் வளர்ப்பு தந்தையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கோர்ட்டில் உரிய உத்தரவு பெற்று வந்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்க முடியும்" என்று கூறி என் விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அதிகாரி 19.7.2016 அன்று நிராகரித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, வளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம் என கூறி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து 4 வாரத்துக்குள் மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.