கனமழையால் தாம்பரம் - ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது !
சென்னை: சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் சென்னை மாநகரத்தை பிற தென் மாவட்டங்களுடன் இணைக்கும் சென்னை - திருச்சி, கிராண்ட் சதர்ன் டிரங் (ஜி.எஸ்.டி.) சாலை ஆறாக மாறிவிட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், ஏற்கெனவே நிரம்பியுள்ள ஏரிகள், குளங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் கிராண்ட் சதர்ன் டிரங் (ஜி.எஸ்.டி.) சாலை வெள்ளக்காடாக மாறியுள்ளது.
இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களால் போக்குவரத்து முழுவதுமாக ஸ்தம்பித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நகர முடியாத அளவிற்கு சிக்கித் தவித்து வருகின்றனர்.
சென்னை- தாம்பரம் இடையே இச்சாலையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நீண்ட தூரப் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை நோக்கி வரும் பேருந்துகள் அனைத்தும் செங்கல்பட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர்ந்து பேருந்துகளை இயக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் மீண்டும் மழை மிரட்டி வருவதால் சென்னை வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.