கோவை: நகைப்பட்டறை அதிபரிடம் 4.5 கிலோ தங்கக்கட்டிகள் கொள்ளை
கோவை: கோவையில் நகைப்பட்டறை அதிபரையும், ஊழியர்களையும் அரிவாள் முனையில் மிரட்டி 4.5 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வெரைட்டிஹால் ரோடு பொன்னையா ராஜபுரத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேசன் (வயது 43), சீனிவாசன் நகைப்பட்டறை அதிபர்கள். இவர்களது நகைப்பட்டறையில் பிரகாஷ்(35), விஜயகுமார்(38) ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள்.
நகைப்பட்டறையில் நகைகள் செய்து பல்வேறு ஊர்களில் உள்ள நகைக்கடைகளுக்கு சப்ளை செய்வார்கள். வழக்கம் போல் கடை ஊழியர்களான பிரகாஷ், விஜயகுமார் இருவரும் சென்னைக்கு நகை சப்ளை செய்ய சென்றனர். பின்னர் அங்கிருந்து 4.5 கிலோ தங்கக்கட்டிகளை வாங்கிக்கொண்டு சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று காலை கோவை வந்தனர்.
அவர்கள் இருவரையும் வெங்கடேசன் தனது காரில் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினார். கார் வீட்டின் அருகே சென்றதும் தங்கக்கட்டிகள் இருந்த பையை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்கள்.
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் தங்கள் முகத்தை துணியால் மறைத்திருந்தனர். அரிவாள் வைத்திருந்த முகமூடி கொள்ளையர்கள் நான்கு பேரும் தங்கக்கட்டி இருந்த பையை பறிக்க முயன்றனர். நகைப்பட்டறை ஊழியர்கள் தரமுடியாது என மறுக்கவே ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் அரிவாளால் அவர்களை வெட்டினார்கள். பின்னர் காரின் கண்ணாடியை அரிவாளால் உடைத்தனர். அதன் பின்னர் தங்கக்கட்டிகள் இருந்த பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இந்த கொள்ளை பற்றி தகவல் அறிந்த போலீஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். நகைப்பட்டறை ஊழியர்கள் தங்கக்கட்டிகள் எடுத்து வருவதை அறிந்தே முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொள்ளையில் துப்பு துலக்குவதற்கு வசதியாக நகைக்கடை ஊழியர்கள் இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கொள்ளை போன தங்கக்கட்டிகளின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் இருக்கும் எனத்தெரிகிறது. நகைக்கடை அதிபர் மற்றும் ஊழியர்களிடம் இன்று காலை நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் தனியே நடந்து செல்லும் பெண்களை வழிமறித்து நகை பறிப்பது, பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டுவது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான புகார்கள் போலீஸ் நிலையங்களில் குவிந்து கொண்டிருக்கின்றன. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் குற்றச்செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதுவரை நடந்த சம்பவங்களை எல்லாம் மிஞ்சும் வகையில் இன்று காலையில் நகைப்பட்டறை அதிபரிடம் முகமூடி கொள்ளையர்கள் 4.5 கிலோ தங்கக்கட்டிகளை பறித்துச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.