திருச்செந்தூரில் சரத்குமார் தோல்வி; திருவாடனையில் கருணாஸ் இழுபறி- ஜூவி சர்வே
சென்னை: திருச்செந்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் சரத்குமார் தோல்வியடைவார் என்றும் திருவாடனை தொகுதியில் கருணாஸ் வெற்றி வாய்ப்பு இழுபறி நிலையில் இருப்பதாகவும் ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் முன்வைக்கும் உள்ளூர்காரர், மண்ணின் மைந்தர் என்ற முழக்கமே இந்த இரு நடிகர்களுக்கும் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
நடிகர் சங்கத்தேர்தலில் எதிரும் புதிருமாக இருந்த சரத்குமாரும், நடிகர் கருணாசும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகின்றனர். இதில் சமக தலைவர் சரத்குமாருக்கு திருச்செந்தூர் தொகுதியும், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாசுக்கு திருவாடனை தொகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள், ஆனால் தென் மாவட்டங்களில் போட்டியிடும் இவர்களுக்கு தொகுதிவாசிகளிடையே நடிகர் என்ற அறிமுகம் உள்ளது. இரண்டு தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதே தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் போட்டி கடுமையாக உள்ளது.
சமக சரத்குமார்
சமத்துவ கட்சித்தலைவர் சரத்குமார் கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை அவருக்கு திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.
அனிதாராதாகிருஷ்ணன்
திருச்செந்தூர் தொகுதியை தனது கோட்டையாகவே மாற்றி வைத்திருக்கிறார். அதிமுகவில் இருந்த போதும் அனிதா ராதாகிருஷ்ணன்தான் வெற்றி பெற்றார். திமுகவில் இணைந்த பின்னரும் அனிதா ராதாகிருஷ்ணனே வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருக்கிறார்.
சரத்குமாருக்கு தோல்வி முகம்
இரட்டை இலைக்கு வாக்களிப்போம் என்று 33 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். அதே நேரத்தில் திமுகவிற்கு வாக்களிப்போம் என்று 41 சதவிகிதம் பேரும், தேமுதிகவிற்கு வாக்களிப்போம் என்று 10 சதவிகிதம் பேரும் கூறியுள்ளதாக ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.
பாஜக வாக்கு வங்கி
திருச்செந்தூர் தொகுதியில் பாஜகவிற்கு கனிசமான வாக்கு வங்கி உள்ளது. 9 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாமகவிற்கு 3சதவிகிதம் பேரும், மற்றவை 2 சதவிகிதம் பேரும் கருத்து இல்லை என்று 2 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.
சரத்துக்கு சறுக்கல்
இரட்டை இலை வாக்கு வங்கி அதிகம் உள்ள தொகுதி என்பதால் சரத்குமாருக்கு திருச்செந்தூர் கை கொடுக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. உள்ளூர்காரரும் பலமான வேட்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணனுடன் மோதுவது சற்றே சறுக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.
திருவாடனை கருணாஸ்
அதிமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் திமுக சார்பில் சுப.த. திவாகரன், தேமுதிக வேட்பாளராக மணிமாறன், பாஜக கூட்டணியில் உள்ள இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழக வேட்பாளர் தேவநாதன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
கருணாஸ்க்கு சிக்கல்
நடிகர் கருணாசுக்கு அதிமுகவினர் போதிய ஒத்துழைப்பை தரவில்லை என்ற புகார் ஒரு பக்கம் இருக்கிறது. அதே நேரத்தில் சுப. தங்கவேலன் மண்ணின் மைந்தன் பிரச்சனையை கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். கருணாஸ் சென்னைக்கு போய்விடுவார் என்றும் இந்த தொகுதியிலேயே இருக்கப் போவது திவாகரன்தான் என்றும் பலமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.
ஜான் பாண்டியன்
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனுக்கு அதிமுக கூட்டணியில் இடம் அளிக்கப்படவில்லை எனவே அவர் திருவாடனை தொகுதியில் களமிறங்கியுள்ளார். தேவநாதனும், ஜான் பாண்டியனும் அவரவர்களின் சமூகத்து வாக்குகளை பிரித்து விடுவார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.
யாருக்கு எத்தனை சதவிகிதம்
இரட்டை இலைக்கு 38 சதவிகிதம் பேரும், திமுகவிற்கு 40 சதவிகிதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர். தேமுதிகவிற்கு இந்த தொகுதியில் 8 சதவிகிதம் வாக்காளர்களின் ஆதரவு உள்ளது. பாஜகவிற்கு 3 சதவிகித வாக்காளர்களும் மற்ற கட்சியினருக்கு 9 சதவிகிதம் வாக்காளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சட்டசபைக்கு செல்வாரா?
திமுக வேட்பாளரை விட கருணாஸ் குறைந்த அளவில்தான் பின் தங்கியுள்ளதாக ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற கருணாஸ் ஜெயித்து சட்டசபைக்கு செல்வாரா? மே 19ம் தேதி தெரியவரும்.