மின்சார பயன்பாடு அதிகரிப்பு - பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் திணறும் மின் வாரியம்
நெல்லை: தமிழகத்தில் மின் நுகர்வு அதிகரித்து வருவதால் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் தமிழக மின்சார வாரியம் திணறி வருகிறது.
தமிழகத்தில் மின் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே மிகப்பெரிய பற்றாக்குறை நிலவுகிறது. இதை சமாளிக்க வெளியிடங்களில் கூடுதல் தொகை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகள் குறறம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் தற்போது காற்று சீசன் இல்லாததால் காற்றாலை மின்சாரம் கைகொடுக்கவில்லை.
பொதுவாக கோடை காலத்தில் மின் நுகர்வு அதிகரிப்பது வழக்கம். கடந்த ஆண்டை விட இந்தாண்டு பிப்ரவரி முதலே கொடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மின் நுகர்வும் உயர்ந்து வருகிறது. மின்விசிறி, ஏசி, ஏர் கூலர் உள்ளிட்டவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின் நுகர்வு மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மின் நுகர்வு சராசரியாக 20% அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு வெளியிடங்களில் இருந்து சுமார் 650 மெகா வாட் கொள்முதல் செய்த நிலையில் தற்போது மின்வாரியம் நாள் ஒன்றுக்கு 2932 மெகா வாட் மின் கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளது.
இதில் பற்றாக்குறையா சமாளிக்க சோலார் மின் உற்பத்தியும் பயன்படுத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 781 மெகா வாட் சோலார் மின்சாரம் உற்பத்தியாகி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.