நமக்கு நாமே பயணத்தில் ஸ்டாலின்... பார்த்தது, ரசித்தது, ருசித்தது
சென்னை: ' கோபப்படுங்கள்... நன்றாக கோபப்படுங்கள்' என்று கூறி நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை நாகர்கோவிலில் தொடங்கிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் , 233 சட்டசபை தொகுதிகளுக்கும் பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். குமரி மாவட்டத்தில் தொடங்கிய பயணத்தை சென்னையில் 234 தொகுதியாக தியாகராயநகரில் முடித்தார் ஸ்டாலின்.
விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், சுயஉதவிக் குழுக்கள், நெசவாளர்கள், மீனவர்கள், தொழில் முனைவோர், தொழில்துறை வல்லுனர்கள், தொழிலாளர்கள், என சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களையும் நேரடியாக சந்தித்து, அவர்களின் விருப்பங்கள் மற்றும் குறைகளை கேட்ட ஸ்டாலின், திமுக ஆட்சியில் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று கூறி நம்பிக்கை அளித்திருக்கிறார்.
நாகர்கோவிலில் தொடங்கிய நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை கடந்த ஆண்டு திருவள்ளூரில் முடித்தார் ஸ்டாலின். 4ம் கட்ட பயணத்தை சென்னையில் தொடங்க நினைத்த ஸ்டாலினை மழை சற்றே ஓய்வெடுக்க வைத்தது. ஆனாலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். மழைக்குப் பின்னர் ஜனவரி 6ம் தேதியன்று சென்னையில் ஆர்.கே. நகர் தொகுதியில் மீண்டும் தனது பயணத்தை தொடங்கியவர், மீனவ சமூகத்தினர், ஆட்டோ தொழிலாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்களை சந்தித்து பேசிய அவர், இன்று தியாகராய நகரில் தனது விடியல் மீட்பு பயணத்தை நிறைவு செய்கிறார். தனது பயணத்தில் ஸ்டாலின் பார்த்து, ரசித்து, ருசித்த சில நிகழ்வுகளை உங்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறோம்.
ஆட்டோ, சைக்கிள்
நமக்கு நாமே பயணத்தின் போது ஆட்டோவில் ஃபுட் போர்ட் அடித்த ஸ்டாலின், சில இடங்களில் சைக்கிளில் பயணித்து மக்களை சந்தித்தார்.
ராமானுஜர் தரிசனம்
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சென்ற மு.க.ஸ்டாலின், 108 வைணவத்தலங்களில் ஒன்றான சௌமிய நாராயண பெருமாள் கோவிலுக்குள் சென்று மதத்தில் புரட்சி செய்த மகான் ஸ்ரீ ராமானுஜரை தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
படுகர் நடனம்
நீலகிரி மாவட்டத்தில் சூட்டிங் மட்டத்தில் பழங்குடியின இன மக்களுடன் பாரம்பரிய நடனம் ஆடிய ஸ்டாலின் அவர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தார்
நாற்று நட்ட ஸ்டாலின்
தஞ்சையில் பயணம் செய்த போது கண்டியூரில் வயலில் சேற்றில் இறங்கி நாற்று நாட்டார். அவர் நட்ட வயலில் 40 மூட்டை நெல் அறுவடை செய்துள்ளார்களாம்.
ஏர் பூட்டிய ஸ்டாலின்
சிவகங்கை, தஞ்சையில் டிராக்டர் ஓட்டிய ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டத்தில் மாடுகளை ஏரில் பூட்டி நிலத்தில் உழுதார்.
நெசவு செய்த ஸ்டாலின்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் சென்று நெசவாளர் ஒருவரின் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த தறியை நெய்து பார்த்தார்.
உற்சாக விளையாட்டு
விழுப்புரம் சென்ற போது காலையில் விளையாட்டு மைதானத்துக்கு சென்ற ஸ்டாலின், மைதானத்தில் இளைஞர்களுடன் கிரிக்கெட், கால்பந்து, இறகுப்பந்து விளையாடினார்.
சிலம்பம்
கரூரில் சிலம்பம் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களை சந்திந்துப் பேசிய ஸ்டாலின், தானும் சிலம்பம் சுற்றி அவர்களை உற்சாகமூட்டினார்.
இருட்டுக்கடை அல்வா
தனது பயணத்தின் போது சாலையோர உணவகங்களில் டீ குடித்த ஸ்டாலின், திருநெல்வேலியில் பிரபல இருட்டுக்கடை அல்வாவை ருசித்தார்,
மதுரை ஜிகர்தண்டா
ஒவ்வொரு ஊர் பயணத்தின் போதும் அந்தந்த ஊர் உணவுகளை ருசிக்கத் தவறுவதில்லை. ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவாவை ரசித்த ஸ்டாலின், மதுரையில் ஃபேமஸ் ஜில் ஜில் ஜிகர்தண்டாவை ருசித்தார்.
சந்தை பக்கோடா
திருப்பூர் மாவட்டத்தில் வாரச்சந்தைக்கு போன ஸ்டாலின், பக்கோடா, உணவுகளை ருசித்தார். போகும் இடமெங்கும் இளநீர் பருக தவறுவதில்லை ஸ்டாலின்.
ஆலமரத்தடி பஞ்சாயத்து
வழக்கமான வேட்டி, சட்டை அணியாமல் பேண்ட், டி சர்ட் அணிந்து மக்களை சந்தித்த ஸ்டாலின், ஆலமரத்தடி, பொதுமேடை என அமர்ந்து மக்களிடம் பேசியது சற்றே வித்தியாசமாகத்தான் இருந்தது. ஆனால் ஐ.டி. நிறுவன ஊழியர்களை சந்தித்த போது மட்டும் கோட் சூட் அணிந்து கெட்அப் மாறினார்.
சென்ற இடமெங்கும் செல்ஃபி
பயணத்தின் போது ஸ்டாலின் சென்ற இடமெங்கும் உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள், அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். மக்களிடம் குறை கேட்ட ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பின்னர் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். நமக்கு நாமே பயணம் திமுகவிற்கு வாக்குகளைப் பெற்றுத் தரவேண்டும். தருமா?