சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்
தமிழக அரசு சென்னை வாழ் மக்களுக்கு குடிநீர் பிரச்சனையை போக்க வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு வரலாறு காணாத தொடர் மழை பெய்ததால், சென்னைக்கு குடிநீர் இருப்பு வைக்கும் ஏரிகள் யாவும் நிரம்பியதால், மேலும் தண்ணீர் வந்துகொண்டுஇருந்ததால் ஏரிகளில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டது. ஏரிகளில் உள்ள தண்ணீர் தேவைக்கு ஏற்ப இருப்பு இல்லாதநிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மழைநீர் சேமிப்பு திட்டத்திற்கு தமிழக அரசு ஒதுக்கிய நிதி சரியான முறையில் செயல்படுத்தப் படாததால் பெய்தமழை நீர் அனைத்தும் கடலில் கலந்துவிட்டதை அனுபவ ரீதியாக உணர்கிறோம். சென்னை மாநகர் குடிநீர் வாரியம் நாள்தோறும் சென்னை மாநகர மக்களுக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குகிறது.
மக்கள் தொகையும் அதிகரித்துக் கொண்டே போகிறது, தண்ணீரின் தேவையும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமானதாக இல்லை. 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள சென்னை மாநகர மக்கள் தொகை 91,14,455 ஆகும். 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் போதுமானதல்ல. இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டால் தண்ணீர் பெறுவது எப்படி என்று முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததற்கான அறிகுறி இல்லை.
ஆனால் 6,61,405 வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் நாள் தோறும் செய்யப்படுகிறது. 504 மெட்ரோ தண்ணீர் லாரிகள் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. 10,683 தண்ணீர் டேங்குகள் உள்ளதாகவும் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. தற்பொழுது ஏரிகளில் உள்ள தண்ணீரின் இருப்பு குறைந்துகொண்டே இருக்கிறது, ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் தண்ணீர் போதுமானதாக இல்லை, வீராணம் ஏரியிலிருந்து வரும் தண்ணீர் போதுமானதாக இல்லாததால் அங்குள்ள விவசாயிகள், விவசாயத்திற்கும், பாசனத்திற்கும் போராடுகிறார்கள்.
கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் விடாததால் மேட்டூர் அணை வரண்ட நிலையில் உள்ளது. எம்.ஜி.ஆர்.தண்ணீர் பஞ்சத்தை போக்க ஆந்திர முதல்வர் என்.டி.ஆர். அவர்களை நேரில் சந்தித்து சென்னை மக்களுக்கான குடிநீர், ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனையை போக்கினார். அதுமட்டுமல்ல கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணைக்கு கால்வாய் அமைத்து அங்கு இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வந்து திட்டத்தின் பலனை அனுபவிக்கிறோம்.
ரயில் மூலம் குடிதண்ணீர் கொண்டு வந்து மக்கள் குடிநீர் பிரச்சனையை போக்கிய எம்.ஜி.ஆர். உழைப்பை யாரும் மறக்க முடியாது. இருபத்தைந்து நாட்களுக்கு போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீரின் அளவை குறைக்கவும் உள்ளதாக செய்திகள் வருகிறது. மக்கள் நலன் கருதி தமிழக அரசு பொதுபணித்துறை அமைச்சரை அனுப்பி வைத்து, கர்நாடக அரசிடம் நேரில் சென்று கலந்து பேசி, காவிரியில் தண்ணீர் விட வற்புறுத்த வேண்டும்.
ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து சென்னை குடிநீர் பிரச்சனையை தீர்க்க கூடுதலாக கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடகோர வேண்டும். சென்னை குடிநீர் வழங்கும் வாரியத்தில் நிரப்பப்படாமல் உள்ள இரண்டு உயர்அதிகாரிகள் (IAS) பணிகளை நிரப்ப வேண்டும். தமிழக அரசு சென்னை வாழ் மக்களுக்கு குடிநீர் பிரச்சனையை போக்க வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.