லாரி ஏற்றிக் கொல்வோம்.. தமிழிசைக்கு எஸ்.எம்.எஸ்சில் வந்த மிரட்டல்!
சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் கொலைமிரட்டல் வந்துள்ள நிலையில், பாதுகாப்பு எதையும் தான் கேட்கப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
தமிழகத்தில் பல முனை அரசியல் போட்டி ஏற்பட்டாலும், ஏற்பட்டது, தேர்தல் களம், கொலைக்களம் போன்ற தோற்றத்தை உருவாக்க தொடங்கியுள்ளது.
திருவாரூரில் வைகோ மீது திமுகவினர் தடிகளாலும், கற்களாலும் தாக்குதல் நடத்த முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாஜக தலைவர் தமிழிசைக்கும் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டி
சென்னை விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.
கார் ஏற்றுவதாக மிரட்டல்
இந்நிலையில், தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கார் மீது லாரி ஏற்றிக் கொன்று விடுவோம் என எஸ்.எம்.எஸ் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பின்வாங்க மாட்டேன்
இதுகுறித்து இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விடுத்த இந்த கொலை மிரட்டல் குறித்து, நான் கவலைப்படவில்லை. இதுபோன்ற மிரட்டல்கள் மூலம் என் பணிகளில் இருந்து பின்வாங்க மாட்டேன்.
சந்தேகம் இல்லை
தனிப்பட்ட முறையில் எனக்கு யார்மீதும் எனக்கு சந்தேகம் இல்லை. கொலை மிரட்டால் எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்கமாட்டேன். கொலை மிரட்டல் விடுத்தவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவர்கள் மீதான பாதுகாப்பில் தேர்தல் ஆணையம் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
ஆலோசனை
மிரட்டல் குறித்து கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.