டாஸ்மாக் பார் ஏலம் 3 மாதத்திற்கு ஒத்தி வைப்பு.. காரணம் என்ன?
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் டாஸ்மாக் பார் ஏலம் விடுவது 3 மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 6,823 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. அதே போன்று அனுமதி பெற்று 4,631 பார்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்தன. ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் பார்களுக்கான ஏலம் விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பார்களுக்கான ஏலம் இன்னும் விடப்படவில்லை.
ஆண்டுக்கு சுமார் 400 கோடிக்கு ரூபாய் மேல் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாயை ஈட்டுத் தரும் இந்த பார்களுக்கான ஏலம் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களில் நடத்தி முடித்திருக்க வேண்டும். ஆனால் அது இன்னும் நடைபெறவில்லை. மேலும் 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. அட்டவணைப்படி, இந்நேரம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தேர்தல் நடைபெறுவது தள்ளிப்போயுள்ளது.
மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் இல்லாமல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது.