தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் முதல்வருடன் சந்திப்பு.. "காம்ப்ரமைஸா" இல்லை கலகமா?
அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்கதமிழ்ச் செல்வன், வெற்றிவேல் உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடியை சந்தித்து தினகரனுடன் ஆலோசித்த கருத்துகளை விவாதித்துள்ளனர்.
சென்னை: அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்ததமிழ்ச் செல்வன், வெற்றிவேல் உள்ளிட்டோர் டிடிவி தினகரனின் வீட்டில் நடத்திய ஆலோசனை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடியுடன் விவாதித்துள்ளனர்.
ஓ.பன்னீர் செல்வம் அணியும் , எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றாக இணையவுள்ள நிலையில் அதற்கு தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அவர் தலைமையில் தனி அணியாக பிரிந்தனர். இதனால் அதிமுக தற்போது 3 அணிகளாக பிளவுபட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலக தயாராக உள்ளேன் என்று கூறிய தினகரன் வீட்டில், எம்எல்ஏ-க்கள் தங்கதமிழ்ச் செல்வன், வெற்றிவேல், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கியுள்ள தினகரனுக்கு வரும் 22-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி போலீஸ் சம்மன் வழங்கியுள்ளது. அதற்குள் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ரீதியில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடியுடன் தங்கதமிழ்ச் செல்வன், கதிர்காமு ஆகியோர் சந்தித்து தினகரன் வீட்டில் நடத்திய ஆலோசனை குறித்து விவாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.