அவ்வை நடராஜன் நீக்கம்.. தமிழுக்கும், தமிழருக்கும், தமிழகத்திற்கும் இழைக்கப்பட்ட அநீதி - வீரமணி
சென்னை: செம்மொழி ஆய்வு நிறுவனத் துணைத் தலைவர் பதவியிலிருந்து அவ்வை நடராஜன் நீக்கப்பட்ட செயல், தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் இழைக்கப்பட்ட அநீதி என்று கடுமையாக கண்டித்துள்ளார் தி.க.தலைவர் கி.வீரமணி.
மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து அவ்வை நடராஜனை மத்திய அரசு திடீரென நீக்கியுள்ளது. இது தமிழறிஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தசெயலை தி.க. தலைவர் கி.வீரமணி கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில், சென்னையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பெரும் முயற்சியால், உருவாக்கப்பட்ட செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தினை, அவர்கள் பதவியில் இல்லாத வாய்ப்பைப் பயன்படுத்தி எந்த அளவுக்கு செயலற்று போக முடியுமோ அந்த அளவிற்கு மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. இது வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது.
ஏற்கனவே ஒரு பொறுப்பதிகாரியாக, தமிழ் மொழி பற்றி தெரியாத ஒரு பெண்ணை அதிகாரியாக போட்ட கொடுமை நடந்தது. காலியாக இருந்த அதன் துணைத் தலைவர் பதவிக்கு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், சீரிய தமிழ் அறிஞருமான அவ்வை நடராஜனாரை, கடந்த சில மாதங்களுக்கு முன் 3 ஆண்டு காலத்திற்கு, துணை தலைவர் பொறுப்பில் நியமித்து அவரும் பொறுப்பேற்றார்.
நேற்று நமக்குக் கிடைத்த செய்தி அவரை நீக்கி விட்டனர் என்பதாகும்.
இதைவிட தமிழுக்கும், தமிழ் நாட்டின் பெருமைக்கும் அவமானம் ஏற்படுத்தும் முயற்சி வேறு உண்டா?
அவர் எக்கட்சி அரசியலையும் சாராத பொது மனிதர். எவரிடத்திலும் அதிர்ந்து கூட பேசத் தெரியாதவர். அவரை இப்படியா அவமானப்படுத்துவது. இது அவருக்கல்ல, தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
இது செம்மொழி அமைப்பைத் தேவையற்றதாக்கும் முயற்சியே ஆகும் என்று வீரமணி கூறியுள்ளார்.