காவல்துறைக்கு ஓசி சாப்பாடு போடுவது வணிகர்கள்தான், மறந்து விட வேண்டாம்..: விக்கிரமராஜா
சென்னை: வணிகர்களிடம் வாங்கிய காசுக்கு நன்றியோடு செயல்படுங்கள் என போலீசாரை எச்சரிக்கும் விதமாகப் பேசியுள்ளார் வணிக சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக வணிக விரோத சட்டங்கள் எதிப்பு மாநாடு நேற்று வண்டலூரில் நடைபெற்றது. விழாவில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது :-
தமிழகம் முழுவதும், வணிகவரித் துறையினரால் வணிகர்கள் மிரட்டப்படுகிறார்கள். லட்சம் லட்சமாக வணிகர்களிடம் இருந்து அதிகாரிகள் லஞ்சம் பெற்று கொள்ளை அடிக்கிறார்கள். இனி லஞ்சம் கேட்டு எங்களை மிரட்டும் அதிகாரிகள், இந்த மாநிலத்தை விட்டு விரட்டப்படுவார்கள்.
தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் 10.30 மணிக்கு கடைய அடைக்க வேண்டும் என்கிறார்கள். இன்னொரு மாவட்டத்திலோ 11.00 மணி வரை நடத்தலாம் என்கிறார்கள். சில மாவட்டங்களிலோ 12 மணி வரை கூட கடைகளைத் திறந்திருக்க அனுமதி உள்ளது.
இரவு நேரத்தில் ரோந்துப் பணியில் சுற்றும் காவலர்களுக்கு ஓசியில் சோறு போடும் கூட்டம் எங்கள் வணிகர்கள் கூட்டம். பெட்ரோல் போட காசில்லையா...? உடனே பழைய இரும்பு பொருள் வியாபாரியை சந்தித்து, காசு வாங்கிக் கொண்டு செல்கிறது காவல்துறை. ஆனால், நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. உழைத்து, போராடி, வரி வசூலித்து கொடுக்கின்றவர்கள்.
இங்கே மாநாடு நடத்தப் போகிறோம் என்று அனுமதி கேட்டு காவல்துறையிடம் ஏற்கனவே முறைப்படி விண்ணப்பித்திருந்தோம். ஆனால், அதனைப் பெற்றுக் கொண்டவர்கள், அனுமதி தராமல் அமைதி காத்தனர். திடீரென பத்து நாட்களுக்கு முன்பு உதவி ஆய்வாளரை அனுப்பி இங்கே மாநாடு நடத்தக் கூடாது என்றார்கள். பின், நீதிமன்றம் சென்று போராடித்தான் இந்த மாநாட்டிற்கான அனுமதி பெற்றோம்.
காவல்துறையினரே, தவறு செய்பவர்கள் உங்கள் முன்னே இருக்கிறார்கள். தமிழகமெங்கும் கூலிப்படைகள் பெருகி இருக்கின்றார்கள். அவர்கள் பிடித்து உள்ளே தள்ளுங்கள். தேவையில்லாமல் எங்கள் மாநாட்டை சீர்குலைக்கும் நோக்கத்தோடு செயல்படாதீர்கள். வாங்கிய காசுக்கு நன்றியோடு செயல்படுங்கள்' என்றார்.