இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் பெற தினகரன் முயற்சித்தது ஏன்? திடுக் தகவல்கள்
இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் பெற டிடிவி தினகரன் தீவிரம் காட்டியதே ஆர்.கே. நகர் தேர்தலை குறிவைத்துதான் என்று விசாரணையில் தெரியவந்தது.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் பெற டிடிவி தினகரன் முயற்சித்ததன் பின்னணியில் முதல்வர் கனவு இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிமுகவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி டெல்லி குற்றவியல் போலீஸார் நடத்திய சோதனையில் நட்சத்திர ஹோட்டலில் இருந்த சுகேஷ் சந்திரா கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்த ரூ.1.30 கோடி பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், சுகேஷிடம் விசாரணை நடத்தினர்.
பல்வேறு திடுக் தகவல்கள்
அப்போது சுகேஷ் பல்வேறு தகவல்களை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து தினகரனிடம் விசாரணை நடத்த சம்மன் வழங்க டெல்லி போலீஸார் சென்னைக்கு வந்து வழங்கினர்.
ஆஜரானார்
அதன்படி கடந்த 22-ஆம் தேதி டெல்லி சென்ற தினகரன், குற்றவியல் போலீஸாரிடம் ஆஜரானார். கடந்த 3 நாள்கள் நடத்திய விசாரணையில் சுகேஷை யாரென்றே தெரியாது என்று கூறினார் தினகரன். இதைத் தொடர்ந்து 4-ஆவது நாளான விசாரணையின் போது சுகேஷை நேருக்கு நேர் வைத்து விசாரணை நடத்தியதன் முடிவில் தினகரன் ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
சென்னை வந்தார் டிடிவி
இந்நிலையில் ஹவாலா கும்பல் மூலம் சுகேஷுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த தினகரன், மல்லி ஆகியோரை டெல்லி போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். தினகரனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ரூ.60 கோடி வரை பணம் கொடுக்க ஒப்புதல் அளித்த இரு தொழிலதிபர்கள் குறித்தும், அதில் ரூ.1.30 கோடியை பரிமாற்றம் செய்ய உதவிய அமைச்சர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
முதல்வர் பதவிக்காக...
இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியிலாவது பெற்றே ஆக வேண்டும் என தினகரன் முயற்சித்தது குறித்து போலீஸார் விசாரணையில் திடுக் தகவல்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆகலாம் என்ற கனவில் இருந்த தினகரன், பணப்பட்டுவாடா செய்ததால் தேர்தல் ரத்தானது. எனினும் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற்றால் மட்டுமே கட்சியும், ஆட்சியும் தம் கைக்குள் இருக்கும் என்பதால் இவர் இத்தகைய நிலைக்கு சென்றதாக விசாரணை மூலம் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது.