பற்றாக்குறை போக்க விவசாயத்துக்கு முன்னுரிமை: தா.பாண்டியன் வலியுறுத்தல்
ஓசூர்: தொழில்துறைக்கு முக்கியத்துவம் தருவதைப் போல விவசாயத்துக்கு முன்னுரிமை தந்தால் உணவுப்பொருள் பற்றாக்குறை நீங்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.
அகில இந்திய விவசாயிகள் சங்க வைரவிழா மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க 24வது மாநில மாநாடு ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:
விவசாயம் முழுமையாக இயற்கையை சார்ந்துள்ளது. ஆனால், தொழில் துறைக்காக விவசாயிகளிடமிருந்து நிலங்கள் பறிக்கப்படுகின்றன. இதனால், உணவு உற்பத்தி அடியோடு குறைந்து விட்டது.
நில உச்சவரம்பு சட்டம், தரிசு நில அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட விவசாய சட்டங்கள் சாகடிக்கப்பட்டு, அப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றன.
கல்வி நிறுவனங்கள் அமைக்க 450 ஏக்கர் முதல் 4,000 ஆயிரம் ஏக்கர் வரை விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன. நில உச்ச வரம்பு சட்டம் யாரையும் கட்டுப்படுத்துவதில்லை.
ஆடு, மாடுகளை விவசாயிகள் பகுதி நேர தொழிலாக வளர்க்கின்றனர். அவற்றுக்காக புல் வளர்ப்பதற்கு கூட காலி இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனனால், கால்நடைகள் கூட அழியும் அபாயத்தில் உள்ளன.
நாட்டின் மொத்த ஆண்டு வருமானத்தில் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் வெறும் 4 சதவீதமாக உள்ளது. ஆனால், தொழில்துறை மூலம் 74 சதவீதம் வருமானமும், மக்கள் கட்டும் சேவை வரிகள் மூலம் 22 சதவீதம் வருமானமும் கிடைக்கிறது.
தொழிற்துறையில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு உற்பத்தி விலை அதிகமாக உள்ளது. ஆனால், இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை.
தொழிற்துறைக்கு கொடுக்கும் முன்னுரிமையை போல், கொஞ்சம் விவசாயத்துக்கும் மத்திய, மாநில அரசுகள் கொடுத்தால், உணவு உற்பத்தி பற்றாக்குறையை தவிர்க்க வாய்ப்புள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications