யார் கூட்டு களவாணி? அதிமுக எம்எல்ஏக்களை விஜய்தான் களவாடுகிறார்! இபிஎஸ் அட்டாக்
சேலம்: அதிமுக சின்னத்தில் வென்ற எம்எல்ஏக்களை விஜய் களவாடி வருகிறார் என முதல்வர் விஜய்யை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுக- திமுக கூட்டு களவாணி என விஜய் விமர்சிக்கிறார். அதிமுக சின்னத்தில் வென்ற எம்எல்ஏக்களை விஜய் களவாடி வருகிறார்.

தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா என சந்தேகம் எழுகிறது. முதல்வர் விஜய் ஆக்கப்பூர்வமாக எதையும் பேசவில்லை. பஞ்ச் டயலாக்கை பேசி வருகிறார். சேலம் அதிமுகவின் கோட்டை.
நான்கு கால்கள் இருந்தால்தான் நாற்காலி நிற்கும். ஆனால் தவெக ஆட்சி 2 கால் உள்ள நாற்காலி போல் தடுமாறுகிறது. விஜய் இன்னும் முதல்வர் அந்தஸ்துக்கே வரவில்லை. முதல்வர் விஜய் பிற கட்சி எம்எல்ஏக்களை இரவல் வாங்கி ஆட்சி நடத்துகிறார். திமுக எதிர்ப்பில் அதிமுக இன்னும் உறுதியாக இருக்கிறது.
மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை. அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தவெகவுக்கு சென்றவர்களுக்கு விஜய் அல்வா கொடுத்துவிட்டார். திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், சுயலாபத்திற்காக தவெக கூட்டணி அரசில் இணைந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் அதிமுக திமுக கூட்டணி என்பது கட்டுக்கதை. திமுக தீயசக்தி என்ற நிலைப்பாடுதான் எனக்கும்! திமுக தீயசக்தி என கூறித்தான் எம்ஜிஆர் கட்சித் தொடங்கினார். அந்த நிலைப்பாட்டில் இப்போதும் மாற்றமில்லை.
தவெக ஆட்சியமைத்து 60 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை அந்த அரசு என்ன செய்தது. சிங்கப்பெண் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இரவில் ஒரு பிரச்சினை நடந்தால் அங்கு வரும் சிங்கப்பெண் அதிரடிப் படையினருக்கு யார் பாதுகாப்பு அளிப்பது?
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுப்பது அதிமுகதான். காவிரி நீருக்காக தீர்ப்பை பெற்றது அதிமுக, ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேகதாது அணை கட்டப்படுகிறது. கரூரில் முதல்வர் விஜய் பேசியது மிகவும் மோசமானது.
முதல்வரின் அந்தஸ்துக்கே அவர் இன்னமும் வரவில்லை. அதிமுக- திமுக கூட்டு களவாணி என்கிறார். அதிமுக சின்னத்தில் வென்ற எம்எல்ஏக்களை திருடும் விஜய்தான் களவாணி! என்றார்.
கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய், அதிமுகவும் திமுகவும் கூட்டு களவாணிகள். இவர்கள் இருவரும் வெவ்வேறு அல்ல, ஒன்றுதான். இவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடச் சொல்லுங்கள் பார்க்கலாம் என விமர்சித்திருந்தார்.
களவாணி, கொத்து பரோட்டா என முதல்வர் விஜய் பேசிய பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.
அதில் "கட்சி நடக்கிறதா?.கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர் ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கை.
திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இரவல் ஆட்சி என்பது அடக்கமுடியாத சிரிப்பையே வரவழைக்கிறது.
கொடநாடு கொலைவழக்கு பற்றிப் பேசினாலே நடுங்குபவர்கள் எல்லாம் டிவிகே அரசு பற்றி குறைகூறுவது குபீர் சிரிப்பு காமெடி.
கட்சியே பீஸ் பீஸாகி வருவது தெரியாமல் காமெடியாகப் பேட்டி தருவதை விடுத்து கட்சியைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்கட்டும்" என தெரிவித்துள்ளது.















Click it and Unblock the Notifications