தவெக எம்எல்ஏ பேர வழக்கில் என் பெயரில்லாத போது எப்படி ஆஜராவது? போலீஸுக்கு செந்தில் பாலாஜி கடிதம்
சென்னை: நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. எனது பெயரும் என் சகோதரர் அசோக்குமார் பெயரும் தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இல்லாத போது நாங்கள் எப்படி விசாரணைக்கு ஆஜராக முடியும் என திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, திருவல்லிக்கேணி போலீஸாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய வழக்கில் எனது பெயரும் எனது சகோதரர் அசோக்குமார் பெயரும் இல்லாத போது நாங்கள் எப்படி விசாரணைக்கு ஆஜராக முடியும்?

நான் இந்த வழக்கில் ஆஜராகும்பட்சத்தில் வேறு எந்த வழக்கிலும் கைது செய்யக் கூடாது. 35 clause (3) BNS என்ற நோட்டீஸ் வழங்க வேண்டும்.
நான் மக்கள் பிரதிநிதி மட்டுமில்லை, தொழில் நிறுவவனங்களை நடத்தி வரும் தொழிலதிபரும் கூட! என செந்தில் பாலாஜி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானத்திற்கு வாக்களிக்க ரூ 35 கோடி பேரம் பேசியதாக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு நெருக்கமான 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் ஆகியோரை விசாரிக்க போலீஸார் முயன்ற போது அவர்கள் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து 5 நாட்களாக தேடியும் அவர்கள் இருப்பிடம் தெரியாத நிலையில் போலீஸார் கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவர்களது பூர்வீக வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவர்களது தாய், தந்தையிடம் சம்மன் கொடுத்து ஆஜராக சொன்னார்கள். ஆனால் இருவருமே குறிப்பிட்ட தேதியில் ஆஜராகவில்லை.
இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
அந்த உத்தரவில் செந்தில் பாலாஜி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் ரூ 35 கோடி வழங்குவதாக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் தற்போதைய அரசை கவிழ்க்க எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதால் செந்தில் பாலாஜியையும் அசோக்குமாரையும் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
மேலும் இருவரும் தலைமறைவாக இருக்கக் கூடாது. வழக்கு தொடர்பான ஆதாரங்கள், காட்சிகளை கலைக்கக் கூடாது என தெரிவித்த நீதிபதி, நிபந்தனைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.















Click it and Unblock the Notifications