கரூர் எஸ்.பி.க்கே தெரியாது! செந்தில் பாலாஜி ரூம் போட்டு காத்திருந்தாரா? நிர்மல் குமார் கேள்வி
மதுரை: கரூர் மாவட்ட எஸ்.பி.க்கே தெரியாத போது செந்தில் பாலாஜி எப்படி அரசு மருத்துவமனைக்கு சென்றார் என கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை திருநகரில் தவெக அமைச்சர் நிர்மல்குமார் கூறியிருப்பதாவது: தினகரனை நம்பி கடந்த 9 ஆண்டுகளாக பயணித்த அதிமுக தொண்டர்கள் பலர் இன்று பணத்தையும் வாழ்க்கையையும் இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை துரோகி என கூறியிருந்தாலும் தண்ணீர் போகும் திசையில் வளைந்து நெளிந்து செல்கிறார். அவர் அப்படி வளைந்து செல்லக் கூடியவர்தான்.

கரூர் சம்பவத்தின் போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.பி. என்னோடுதான் இருந்தார். அவரிடம் நான் கேட்ட போது 2, 3 பேர் மயக்கம் அடைந்ததாகத்தான் கூறினார். மாவட்ட எஸ்பிக்கே தெரியாத நிலையில் செந்தில் பாலாஜி எப்படி 5 நிமிடத்தில் அரசு மருத்துவமனைக்கு சென்றார்?
அவர் என்ன மருத்துவமனைக்கு பக்கத்திலேயே அறை எடுத்துக் காத்திருந்தாரா? கரூர் சம்பவம் விடை தெரியாத கேள்வியாகவே இருக்கும். இதெல்லாம் திமுகவின் சதி திட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். கரூரில் சதியால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டன. கரூரில் நெரிசலில் பலியானோர் குடும்பத்திற்கு அரசு பணி கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.
நீர் நிலை ஆக்கிரமிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையே தவெக அரசை பாராட்டியுள்ளது. இயற்கையை அழித்துவிட்டு வளர்ச்சியை உருவாக்க முடியாது. இயற்கையை அழித்து வளர்ச்சியை உருவாக்க முடியாது. இயற்கையும் வளர்ச்சியும் இணைந்தே பயணிக்க வேண்டும்.
தமிழக அரசு தானாக முன்வந்து நீர் நிலைகளைப் பாதுகாக்கும் பணிகளைச் செய்யும். தமிழக முதல்வர் ஒரு நாளைக்கு 14 மணி நேரத்திற்கு மேல் உழைக்கிறார். எல்லா கோப்புகளையும் சரிபார்த்து கையெழுத்திடுகிறார். அது போல் அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் கடுமையாக உழைக்கிறார்கள். இவ்வாறு நிர்மல்குமார் தெரிவித்தார்.
முன்னதாக மதுரையில் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது: ஒரு முதல்வர் களவாணி என சொல்கிறாரே, இதே வார்த்தையை அவரை திருப்பி சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்? எம்எல்ஏக்களை திருடுகிறார்களே! முதல்முறையாக அமமுக எம்எல்ஏவை ஆசைவார்த்தை காட்டி தங்கள் பக்கம் இழுத்தாங்க. அதிமுக எம்எல்ஏக்களை தவெக இழுப்பது சரியென்றால் திமுகவும் அதிமுகவும் இணைவதில் என்ன தவறு?
அண்ணாவும் ராஜாஜியும் இணைந்து செயல்படவில்லையா? இந்த தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை வலுவான அரசியல் சக்தியாக கருதினால் அவரை எதிர்கொள்ள மற்ற கட்சிகள் வியூகம் வகுப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும் தினகரன் தெரிவித்திருந்தார். இதைத்தான் நிர்மல் குமார் விமர்சித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக திமுக திட்டமிட்டிருந்தது குறித்தும் நிர்மல் குமார் விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications