Vietnam Boat accident: வியட்நாம் தீவில் படகு கவிழ்ந்து விபத்து! பழனியை சேர்ந்வர் உள்பட 15 பேர் பலி!
ஹோனாய்: வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே 32 இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பலியாகிவிட்டனர். இறந்தவர்களில் ஒருவர் தமிழகத்தில் பழனியைச் சேர்ந்த முருகபிரபு என்பவர் தெரியவந்தது. இந்த படகில் பயணித்தவர்களில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தவர்களே அதிகம் பேர் என்கிறார்கள்.

வியட்நாமில் மிகவும் புகழ்பெற்ற தீவு ஃபூ குவோக் ஆகும். இங்கிருந்து சனிக்கிழமையான இன்று ஆன் தோய் துறைமுகத்திற்கு இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு விசைப்படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த படகில் 32 இந்திய பயணிகள், 4 மாலுமிகள் என மொத்தம் 36 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது. புறப்பட்டு 400 மீட்டர் தூரத்தில் திடீரென அந்த படகு பழுதடைந்து நின்றுவிட்டதாம். அப்போது அங்கு பலத்த காற்று வீசியதை அடுத்து அந்த படகு நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
படகில் பயணித்தவர்கள் தண்ணீரிலும் பலர் படகிற்குள்ளேயும் சிக்கிக் கொண்டனர். இந்த படகு விபத்து குறித்து தகவல் அறிந்த கடலோரக் காவல் படை, கடற்படை உள்ளிட்ட குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 15 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. கரைக்கு கொண்டு வரப்பட்ட பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இறந்தவர்களில் பழனியைச் சேர்ந்த முருகபிரபு என்பவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பழனியில் செல்போன் விற்பனை கடை வைத்து நடத்தி வந்தவராம். கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் நண்பர்களுடன் வியட்நாமுக்கு சுற்றுலா சென்றாராம்.
இந்த விபத்து குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள சி மின் சிட்டியில் +84 915523714, +84 334520414 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு இந்திய தூதரக உதவியை நாடலாம். ஹோனாயில் அவசர உதவிக்கு +84 91 308 9165 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மீட்கப்பட்டவர்களில் சிலருக்கு சுயநினைவு இல்லை என சொல்லப்படுகிறது. வியட்நாமில் மழை பொழிவு இல்லாத போதிலும், விபத்து நடந்த நேரத்தில் கடலில் மோசமான சூழல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. எனினும் சுற்றுலா படகுகள் தொடர்ந்து இயக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹா லாங் பே எனும் பகுதியில் 20 குழந்தைகள் உள்பட 48 பேருடன் சென்ற படகு பலத்த காற்று வீசியதால் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் 35 பேர் பலியான சோகம் சம்பவம் நடந்தது. தற்போது மீண்டும் அதே ஜூலையில் இந்த ஆண்டும் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications