பழனி கோயிலின் ரூ.100 கோடி சொத்து பத்திரப்பதிவு ரத்தாகிறது.. கூண்டோடும் சிக்கும் அதிகாரிகள்
திண்டுக்கல்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உத்தரவின் பெயரில், பழனி அடிவாரத்தில் 100 கோடி மதிப்பிலான சொத்தை தனிநபர்களுக்கு சட்டவிரோத பத்திரப்பதிவு செய்யப்பட்டதை எதிர்த்தும், அதனை ரத்து செய்யக்கோரியும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்கவும் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மற்றும் எழுதிக்கொடுத்தவர்கள், வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 1.4 ஏக்கர் நிலம் கோயில் நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டு, பக்தர்களின் இலவச வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்சொத்தைப் பதியக் கூடாது என்று கோயில் நிர்வாகம் மூன்று முறை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, கடந்த ஜூலை 6-ஆம் தேதி சிறப்புப் பணிக்காக வந்த இணைப் பதிவாளர் இந்த நிலத்தைத் தனிநபர்கள் இருவருக்கு வெறும் 2 கோடி ரூபாய்க்குப் பதிவு செய்துகொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக பழனி கோவில் நிர்வாகம் சார்பில், பத்திரப்பதிவு துறைக்கு அனுப்பியுள்ள மனுவில் , "பழனி கோவில் இணை ஆணையர், தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு தக்காராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அவரை நீக்கம் செய்ய வலியுறுத்தி, தண்டபாணி என்பவரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மடத்திற்கு பாத்தியப்பட்ட, 1.4 ஏக்கர் நிலம் தனிநபர்கள் பாராதீனம் செய்ய இயலாது என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
பழனி இணை சார் பதிவாளர்- பணி மாறுதலில் சென்ற நிலையில், கூடுதல் பொறுப்பில் உள்ள சார் பதிவாளர், 2026 ஜூலை 6ல் இந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்தது சட்டத்திற்கு புறம்பானது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது. எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவுகள், மடத்தின் மூலம் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அறிக்கையை மதிக்காமல், ஆவணம் பதிவு செய்துள்ளார். பத்திரப்பதிவை ரத்து செய்வதுடன், பத்திரப்பதிவு செய்த அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதனிடையே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உத்தரவின் பெயரில், பழனி அடிவாரத்தில் 100 கோடி மதிப்பிலான சொத்தை தனிநபர்களுக்கு சட்டவிரோத பத்திரப்பதிவு செய்யப்பட்டதை எதிர்த்தும், அதனை ரத்து செய்யக்கோரியும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்கவும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும், பத்திரப் பதிவினை ரத்து செய்தும், மேற்படி பத்திரப்பதிவு மேற்கொண்ட அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், பத்திரப் பதிவுத்துறை தலைவர், மதுரை மண்டல பதிவுத்துறை துணைத் தலைவர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் ஆகியோருக்கு அனைத்து ஆவணத்துடன் விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, மேற்படி பத்திரப் பதிவு தொடர்பாக தகுதியில்லாத ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு மேற்கொண்ட சார்பதிவாளர், கிரையம் எழுதிக் கொடுத்தவர் மற்றும் வாங்கியவர்கள் உள்ளிட்டோர் மீது காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications