மட்டன்னு சொல்லிட்டு சிக்கன் போடுறதா? களேபரம் ஆன கல்யாண வீடு! மாறி மாறி அடித்துகொண்ட திருமண வீட்டார்
சென்னை: கல்யாண வீட்டில் மட்டனுக்கு பதிலாக சிக்கன் போட்டுவிட்டதாக கூறி திருமண வீட்டினர் அடிதடியில் இறங்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. சந்தோஷமாக மணமக்களை வாழ்த்திவிட்டு செல்ல வந்தவர்கள், சட்டையை கிழித்துக்கொண்டு அடித்து உருண்ட சம்பவம், திருமண வீட்டினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் ஸ்டேஷன் வரை இந்த பஞ்சாயத்து போயுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பீகார் மாநிலத்தில் சகர்சா மாவட்டத்தில் உள்ள சிமிரி பக்தியார்பு டவுனில் தடல் புடலாக திருமணம் நடைபெற்றது. மணமக்களை வாழ்த்துவதற்காக மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டினர் வந்து இருந்தனர். மணமக்கள் இருவரும் இஸ்லாமியர்கள் என்பதால் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

பந்தியில் உட்கார்ந்ததும் வெடித்த களேபரம்
திருமண வீடு என்பதால் உறவினர்களும் உற்சாகம் பொங்க ஒருவொருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டு, மணமக்களை வாழ்த்திக்கொண்டு இருந்தனர். வந்திருந்த உறவினர்களுக்கு மணப்பெண் வீட்டினர் சார்பாக மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதுவரை எல்லாம் நன்றாக போய்க்கொண்டு இருந்த நிலையில் பந்தியில் உக்காந்த பிறகுதான், களேபரமே வெடித்துள்ளது.
மணமக்கள் வீட்டினர் இலையை விரித்து மதிய உணவை சாப்பிட தயாராகினர். அசைவ உணவு விருந்து என்பதால் இன்னைக்கு ஒரு பிடி.. பிடித்துவிட வேண்டியதுதான் என்று காத்திருந்த மண வீட்டினர், இலையில், சிக்கன் வைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மட்டன் கறி போடுவது என்றுதானே பேசினோம்.. இப்போ சிக்கன் கறி போட்டு ஏமாத்துறீங்களா என்று கோபம் அடைந்த மாப்பிள்ளை வீட்டினர், பெண் வீட்டாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
கல்யாண வீடா? கலவர பூமியா?
ஒரு கட்டத்தில் இந்த வாக்கு வாதம் முற்றி கைகலைப்பானது. மாப்பிள்ளை - பெண் வீட்டினர் இருவரும் மாறி மாறி பயங்கரமாக அடித்துக்கொண்டனர். சாப்பாட்டு தட்டுகள் பறந்தன. ஒருபக்கம் சுடச்சுட சிக்கன் கறி ரெடியாகிக்கொண்டு இருந்த சமயத்தில் இன்னொரு பக்கம் அதை விட சூடான வார்த்தைகளுடன் மாப்பிள்ளை - பெண் வீட்டினர் மோதிக்கொண்டு இருந்தனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கையில் கிடைத்த கம்புகள், கட்டைகளை எடுத்துக்கொண்டு இரு தரப்பினரும் அடித்துக்கொண்ட காட்சிகள் கல்யாண வீடா? இல்லை ஏதோ கலவர பூமியா? என நினைக்கும் அளவுக்கு பதை பதைக்க வைத்தது. இந்த மோதலில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். கல்யாண வீட்டில் நடக்கும் மோதல் குறித்து போலீசாருக்கு உடனே தகவல் கொடுத்தனர்.
நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்
போலீசார் அங்கே வந்து விலக்கிவிட்ட பிறகுதான் சண்டை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவம் குறித்து தற்போது இரு வீட்டினரையும் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் வேடிக்கையாகவும் பதிவிட்டு வருகிறார்கள்.
நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "இது என்ன.. ஒரு புறாவுக்கு போரா? என்று வடிவேலு காமெடி போல் அல்லவா கேட்க தோன்றுகிறது" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "திருமண வீட்டினர் விட்டுக்கொடுத்தால் இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் நடக்காது.. ஆனால் இப்போதெல்லாம் அதை பார்ப்பது அரிதாகி வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.














Click it and Unblock the Notifications