பால்கனி சுவர் விழுந்து பெண் காயம்! "துணி காய போட போனாங்க! குச்சியால் தள்ளியதும்.." உறவினர் கண்ணீர்
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் குடிசை மாற்று குடியிருப்பில் பால்கனி சுவர் இடிந்து 3ஆவது மாடியிலிருந்து பெண் ஒருவர் விழுந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் உறவினர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டை எஸ். எம். நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், புதிதாக கட்டப்பட்ட பால்கனி தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் 3ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தரமில்லாத கட்டுமானப் பணி, பாதுகாப்பு குறைபாடும்தான் இந்த விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுமார் 40 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடத்தில் பல இடங்கள் சேதமடைந்து பராமரிப்புகள் செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் கூறுகிறார்கள்.
சென்னை தேனாம்பேட்டை எஸ்.எம்.நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் புதிதாக ஒரு பால்கனி கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பில் குப்பன், அவரது மனைவி லட்சுமியும் வசித்து வந்தனர். கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று காலை வழக்கம் போல் துணி காயப்போடுவதற்காக பால்கனிக்கு லட்சுமி சென்றார். அப்போது அங்கு புதிதாக கட்டப்பட்ட சுவற்றை ஒட்டி அவர் நின்ற போது சுவர் இடிந்து விழுந்தது. இதனால் சுவருடன் சேர்ந்து லட்சுமியும் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். லட்சுமி மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து லட்சுமியின் உறவினர் பேசுகையில், துணி காயப்போட்டு குச்சியால தள்ளி விட்ருக்கா.. அவ்ளோ தான்.. அதுக்கு அப்பறோம் சத்தம் கேட்டு எல்லாரும் ஓடி வந்து பாத்துருக்காங்க.
எங்க குடும்பம் அழிஞ்ச மாதிரி மத்த குடும்பம் அழிய கூடாது.. சிமெண்ட் போடல, சரியான கலவை மிக்ஸிங் இல்ல, வெறும் மணலை வச்சிட்டு மேல செங்கலை வச்சா எப்படி ஸ்ட்ராங்காக நிக்கும் என கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications