‘வந்தே மாதரம்' தான் முதலிடம்.. அரசு நிகழ்ச்சியில் மாநில மொழி பாடலுக்கு 3ம் இடம்.. அமித்ஷா ஆர்டர்
டெல்லி: மத்திய மற்றும் மாநில அரசு நிகழ்ச்சிகளில் முதலில் 'வந்தே மாதரம்' எனும் தேசிய பாடல் பாடப்பட வேண்டும். அதன்பிறகு தேசிய கீதம், பிறகு தான் ஒவ்வொரு மாநிலங்களும் தங்களின் மொழிப்பாடலை பாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதை தவறு இன்றி பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மாநில - யூனியன் பிரதேசங்களுக்கும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதல்வர் விஜய் பதவியேற்பு விழா மற்றும் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்றார். அப்போது முதலில் 'வந்தே மாதரம்' எனும் தேசிய பாடலும், அதன்பிறகு தேசிய கீதமும், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும் இசைக்கப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தான் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவில் அரசு நிகழ்ச்சிகளில் தேசிய பாடலான 'வந்தே மாதரம்', தேசிய கீதம் மற்றும் மாநில மொழிப்பாடல்கள் பாடுவது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் நெறிமுறையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ஆளுநர் அலுவலங்களுக்கும், அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களுக்கும் இதுதொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஜூலை 9ம் தேதியிட்டு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும் உத்தரவில் உள்ள சாரம்சங்கள் பின்வருமாறு:
ஜனாதிபதி நிகழ்ச்சி மற்றும் பிற அரசுகள் ஏற்பாடு செய்யப்படும் ஜனாதிபதி நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி வரும்போதும், புறப்படும்போதும் முதலில் 'வந்தே மாதரம்' எனும் தேசிய பாடல் பாடவோ அல்லது இசைக்கவோ வேண்டும். அதனை தொடர்ந்து தேசிய கீதம் பாடவோ, இசைக்கவோ வேண்டும். ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் நிகழ்ச்சிகளின்போதும் இது பின்பற்றபப்பட வேண்டும்.
அதேவேளையில் குறிப்பிட்ட ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசரத்தில் நடக்கும் அரசு விழா, நிகழ்வின்போதும் ஆளுநர், துணை நிலை ஆளுநர் பங்கேற்கும்போதும், அங்கிருந்து புறப்படும்போதும் முதலில் தேசிய பாடலான வந்தே மாதரமும், அதன்பிறகு தேசிய கீதமும் இசைக்கப்படவோ அல்லது பாடப்படவோ வேண்டும்.
தேசிய பாடல் (வந்தே மாதரம்) மற்றும் தேசிய கீதம் பாடம் போதோ அல்லது இசைக்கும்போதே சரியான உச்சரிப்பு மற்றும் சரியான ஒலிப்புடன் இருக்க வேண்டும். இதனை துல்லியமாக பின்பற்ற வேண்டும். சரியான இசை, உச்சரிப்பு தொடர்பான விவரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில் தேசிய கீதம் அல்லது தேசிய பாடலுடன் மாநில பாடல் (தமிழகத்தில் தமிழ்தாய் வாழ்த்து)இசைக்கப்படுகிறது. இப்படி தேசிய பாடல், தேசிய கீதத்துன் மாநில பாடல் பாடப்படும்போதோ அல்லது இசைக்கப்படும்போதோ முதலில் 'வந்தே மாதரம்' தேசிய பாடலும், அதைத்தொடர்ந்து தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் 'வந்தே மாதரம்' தேசிய பாடல், இரண்டாவது தேசிய கீதம், 3வது மாநில பாடல் இசைக்கப்படவோ அல்லது பாடப்பட வேண்டும் என்பதை அமித்ஷாவின் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications