முருகனுக்காகவே பெரிய சண்டையா? அங்கே ஜூனியர் என்டிஆர்.. இங்கே தனுஷ்.. நடுவில் சிவகார்த்திகேயன் வேற!
சென்னை: தமிழ் சினிமாவுக்கும் தெலுங்கு சினிமாவுக்கும் பாக்ஸ் ஆபீஸிலும் , யார் பான் இந்தியா ஸ்டார் என்பதில் சண்டை வந்திருக்கிறது. எந்த ஹீரோவுக்கு அதிக ஓபனிங் என்பதற்கு கூட பல ரசிகர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது சண்டை நேராக முருகனிடம் வந்து நிற்கிறது. சோசியல் மீடியாவை ஓபன் செய்தாலே முருகன் யாருக்கு சொந்தம்? என்பதுதான் விவாதமாக இருக்கிறது. இதை பார்க்கும் பக்தர்கள், முடியல முருகா... உன்னையும் சினிமா ரசிகர்கள் விட்டு வைக்கலையே! என்று நொந்து கொள்கின்றனர்.
இதற்கு ஆரம்ப புள்ளி ஜூனியர் என்டிஆர்- த்ரிவிவிக்ரம் கூட்டணியில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட காட் ஆஃப் வார் என்ற திரைப்படம் தான். முருகன் வடக்கில் பிறந்து தெற்கில் அதிகம் வழிபட்ட கடவுள் என்கிற அடிப்படையில் வெளியான ஒரு போஸ்டர் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த முருகன் ரசிகர்களையும் கொதிக்க வைத்து விட்டது.
என்னது முருகன் வடக்கில் பிறந்தாரா? தமிழ் கடவுள் இப்போது பான் இந்தியா கடவுளாக பார்க்கிறீர்களா? என்று பலரும் கேள்விகளை தொடங்கி விட்டார்கள். இயக்குனர் சீமான் தொடங்கி சோசியல் மீடியாவில் பலரும் தங்களுடைய கருத்துக்களை சொல்ல ஆரம்பித்தனர். இந்த சர்ச்சை அடங்குவதற்குள் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு புது படத்தின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த படத்தின் பெயர் என்ன தெரியுமா? "தமிழ் முருகன்" தான்.

தனுஷின் புது திரைப்படம்
படத்தின் தலைப்பு வெளியானது தான் தாமதம் உடனே தனுஷ் ரசிகர்கள் கலத்திற்குள் வந்து விட்டார்கள். பார்த்தீர்களா... எங்க தல பதில் சொல்ல வேண்டிய இடத்தில் ட்விட் போடாமல் படத்தின் டைட்டிலிலே பதில் சொல்லிட்டாரு என்று கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். இரண்டு படங்கள் பற்றி முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. கதை கூட என்ன என்பது ரசிகர்களுக்கு தெரியாது. ஆனால் அதற்குள் முருகனுக்கு வடக்கு தெற்கு என்று எல்லை பிரித்து ரசிகர்கள் சண்டையை ஆரம்பித்து விட்டார்கள்.
தமிழ் முருகன் சர்ச்சை
இதற்கு முன்பு ராமாயணம், மகாபாரதம் போன்ற இது இதிகாசங்களை வைத்து இந்திய சினிமாவில் எத்தனை படங்கள் வந்திருக்கின்றன என்பதற்கு கணக்கே இல்லை. ஒரு கதையில் ஹீரோவை மாற்றி, வில்லனை மாற்றி, கிளை கதைகளை பிடித்து பல மொழிகளில் படமாக எடுத்திருக்கிறார்கள். ஆனால் முருகன் என்று வந்து விட்டால் தமிழ்நாட்டில் அந்த உணர்வு கொஞ்சம் வேற மாதிரியாக இருக்கிறது.
தமிழ் இலக்கியம், குறிஞ்சி நிலம், சேயோன் வழிபாடு என்று முருகனுக்கும் தமிழுக்கும் இருக்கும் தொடர்பு அவ்வளவு சாதாரணமாக பிரித்து பார்க்க முடியாது. தனுஷின் தமிழ் முருகன் படத்தை தெலுங்கு ரசிகர்கள் ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் வந்து விட்டார்கள். நாங்க ஏற்கனவே சேயோன் படம் பண்ணிட்டு இருக்கிறோம் இப்பதான் உங்களுக்கு முருகன் ஞாபகம் வந்ததா என்று அவர்களும் தங்கள் பங்குக்கு கேள்வி எழுப்புகிறார்கள்.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள்
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன் நடிக்கும் சேயன் படமும் முருகன் தொடர்பான பின்னணியை கொண்ட படம் என்பது போலத்தான் ட்ரெய்லர் காட்டப்பட்டிருக்கிறது. இதனால் இப்போது தனுஷ் தமிழ் முருகன் என்றதும் இது எங்க ஏரியா என்று சிவகார்த்திகேயன் ரசிகர்களும் சண்டைக்கு வருகிறார்கள்.
முருகன் பற்றி நாக வம்சி போட்ட ட்விட்.. ஜூனியர் என்டிஆர் படத்துக்கு தமிழர்கள் எதிர்ப்பு ஏன் தெரியுமா?
ஆனாலும் தனுஷ் ரசிகர்களுக்கும் ஒரு பயம் இருக்கிறது. அது பற்றி வெற்றிமாறனையே டேக் செய்து கேள்வி கேட்கின்றனர். அதாவது வட சென்னை 2 எப்போது வரும் என்பதற்கே இன்னும் பதில் கிடைக்கல..? வாடிவாசல் பற்றிய அப்டேட்டுக்காக காத்திருந்து எங்களுக்கு பழகிவிட்டது.. சிம்புவின் அரசன் வேற இருக்கிறது... இதற்கிடையே தனுஷின் தமிழ் முருகன் அறிவிப்பு வேற வந்திருக்கிறது. அதனால் இந்த அறிவிப்பு வீடியோவை பார்த்து சந்தோஷப்படுவதா அல்லது இந்த படம் தியேட்டருக்கு எப்போ வரும் என்று காத்திருப்பதா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

தமிழ் முருகன் படம் பின்னணி
தமிழ் முருகன் திரைப்படம் எழுத்தாளர் அறிவுமதியின் "தமிழ் முருகன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு வெற்றிமாறன் என்ன மாதிரியான உலகத்தை உருவாக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. வெற்றிமாறன் என்றாலே மண், மனிதர்கள், அரசியல், வரலாறு என்று கதைக்கு இன்னொரு அடுக்கு இருக்கும். அப்படிப்பட்ட ஒருவர் முருகனை கையில் எடுத்திருக்கிறார் என்றால் இது வெறும் வேல், மயில், போர் என்று முடியும் படமாக இருக்க வாய்ப்பு குறைவு என்றும் பலரும் கூறி வருகிறார்கள்.
தனுஷ் தான் என் கடவுள்.. ஸ்கூல் படிக்கும்போது இருந்தே செய்த உதவி! பாபா பாஸ்கர் உருக்கம்
இதையெல்லாம் பார்த்தால் அடுத்த சில மாதங்களுக்கு கோலிவுட் டோலிவுட் ரசிகர்களுக்கு கண்டெண்டுக்கு பஞ்சமே இருக்காது போல. ஆனால் கடைசியில் ஒரு விஷயம் தான்... முருகனை வைத்து யார் படம் எடுத்தாலும் பரவாயில்லை, ரசிகர்களின் சண்டையை தாண்டி நல்ல படமாக எடுத்து... அறிவித்த காலத்திற்குள் தியேட்டருக்கு கொண்டு வந்தால் அதுவே சேயோன் செய்த பெரிய அருளாக இருக்கும்.












Click it and Unblock the Notifications