கோடி கோடியாய் சம்பாதிச்சீங்களே.. உங்க காசை கொடுங்க விஜய்.. அரசுப்பணி எதுக்கு.. ஜெயகுமார் கேள்வி
சென்னை: முதலமைச்சர் விஜய் நேற்று கரூர் சென்றார். கடந்த வருடம் கரூர் தவெகவின் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசிலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, கருணை அடிப்படையில் அரசு பணி ஆணையை வழங்கினார். இது அரசியலில் பெரும் விவாதமாகியுள்ளது. விஜய் செய்தது தவறு என்று சில அரசியல்வாதிகள் புகார் கூறியுள்ளனர். விஜய் தான் கோடி கோடியாய் சம்பாதித்துள்ளாரே. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி வழங்கலாமே என்று அதிமுக ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கரூரில் விஜய் வழக்கமான ஸ்க்ரிப்டை பேசியுள்ளார். புது மாதிரியான ஸ்க்ரிப்ட் கிடையாது. ஒரு சிஎம் என்றால் சாதுர்யமாக பேச வேண்டும். அப்படி இல்லாமல் சினிமாவில் எப்படி ஒரு ஷாட்டை திட்டமிட்டு படமாக்குவார்களோ, அதேபோல வசனத்தை ஒப்பித்து சென்றுள்ளார். இடைத்தேர்தலை மனதில் வைத்து தான் விஜய் பயணம் அமைந்துள்ளது.

இளைஞர்களின் எதிர்காலம்
தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு ஒருவருக்கு வேலை தருவோம் என்று தவெக கூறியது. அவர்கள் சொன்னதை போல வீட்டிற்கு ஒருவருக்கு வேலை தரவில்லை. 3.5 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாகவுள்ளன. அதை நிரப்புவதற்கு என்ன திட்டம் இருக்கிறது என்று பேசினீர்களா. விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தான் பேசினீர்களா.
குறுவை சாகுபடிக்கான 9.90 டிஎம்சி தண்ணீர் தேவை. அதேபோல அடுத்த மாதம் சம்பா சாகுபடிக்கு 30 டிஎம்சி தண்ணீர் தேவை. அதை திறந்து வைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூரும் காவிரி பாயும் இடம். அதைப்பற்றி அங்கு ஏதாவது பேசினீர்களா. பேசவில்லை. டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டிய காலி பணியிடங்கள் அதிகமாக உள்ளது. இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. ஒரு 32 அரசுப் பணி கொடுத்துள்ளனர்.
கோடி கோடியாய் சம்பாதிச்சீங்களே
எம்ஜிஆருடன் ஒப்பிடும் போது, அவர் 1952 ஆம் ஆண்டில் இருந்து சம்பாதித்த பணத்தை வாரி வாரி ஏழை மக்களுக்கு கொடுத்தார். அதனால் இன்றைக்கும் புரட்சி தலைவரின் பெயரை உச்சரிக்காத தலைவர்கள் இல்லை. 1983 ஆம் ஆண்டு விஜய் நடிக்க வந்தார். அவர் எவ்வளவு பணம் சம்பாதித்திருப்பார். ஏழை மக்களுக்கு வாரி வழங்கினாரா. அரசியலுக்கு வந்த பிறகு தான் விளம்பரத்துக்காக ஏதோ செய்தார். கோடி கோடியாய் சம்பாதித்தார் விஜய். எங்கள் தலைவரும் நிறைய சம்பாதித்தாலும் தனக்கு எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
2 குடும்பங்களுக்கு ஆளுக்கு தலா ரூ.1 கோடி கொடுத்திருக்கலாமே. அதை வங்கியில் செலுத்தினாலே ஏகப்பட்ட வட்டி கிடைக்கும். பொருளாதார ரீதியாகவும் முன்னுக்கு வர முடியும். டிஎன்பிஎஸ்சி கொடுக்கும் வாய்ப்பை ஏன் தட்டி பறிக்க வேண்டும். கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு கொடுத்துள்ளார். தீயசக்தி, அந்த சக்தி, இந்த சக்தி என்று கூறினார். ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் எங்களுக்கும் மாறுபட்ட கருத்து இல்லை.
கோழி திருடன்
கரையான் போல சமூகத்தை ஊழல் அரித்து கொண்டிருக்கிறது. ஆனால் யாரை வைத்து கொண்டு ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறீர்கள். ஊருக்கு தான் உபதேசமா. கோழி திருடனை பக்கத்தில் வைத்து கொண்டு, ஊரெல்லாம் தண்டாரோ போட்டானாம் ஒருவன் என்று கிராமத்தில் ஒரு பழமொழி உள்ளது. மக்கள் எள்ளி நகையாடும் வகையில், சி.எம் என்பதை மறந்து அருவருக்கத்தக்க வகையில் விஜய் பேசியுள்ளார்" என்றார்.












Click it and Unblock the Notifications