எந்த மேம்பால டெண்டர் ரத்து? கரூரில் விஜய் சொன்னாரே.. முதல்வர் பேச்சால் குழம்பும் அதிகாரிகள்!
சென்னை: கரூரில் முதல்வர் விஜய் பேசுகையில், திமுக ஆட்சியின் போது சென்னையில் அறிவிக்கப்பட்ட ஒரு மேம்பாலத்தின் செலவு இருமடங்காக இருந்தது. அந்த டெண்டரை ரத்து செய்துவிட்டோம் என்று தெரிவித்திருந்தார். தவெக ஆட்சி அமைத்த பின் சென்னை மாநகராட்சி சார்பாக விடப்பட்ட வேளச்சேரி மேம்பாலத் திட்டம் உட்பட ரூ.700 கோடி மதிப்பிலான டெண்டர் மட்டுமே ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் முதல்வர் விஜய் எந்த மேம்பாலத்தின் டெண்டர் ரத்து செய்யப்பட்டது என்பது தொடர்பாக விசாரிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் 2 மேம்பாலத் திட்டங்கள் மட்டுமே பரிசீலனையில் உள்ளன. அதன்படி ஒன்று வேளச்சேரி மேம்பாலம் மற்றும் திருமான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலை திட்டம் தான்.

வேளச்சேரி மேம்பாலம் தொடர்பாக சென்னை மாகராட்சி அதிகாரிகள் பேசுகையில், இந்த மேம்பாலத்தின் டெண்டர் மதிப்பு ரூ.310 கோடியாகும். இது ஏற்கனவே திரும்பபெறப்பட்டுவிட்டது. அதற்கு மெட்ரோ ரயில் பாதைக்கான வழித்தடக் குழப்பம் மற்றும் நிதிப் பற்றாக்குறை தான். மாறாக திட்டத்தின் மதிப்பு இரு மடங்காக உயர்த்தப்பட்டது அல்ல.
இதுதொடர்பாக நாங்கள் முதல்வர் அலுவலகத்திற்கு எந்தவொரு முறைகேடு அறிக்கையையும் கொடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலை திட்டம் தொடர்பாக தமிழக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேசுகையில், இந்த ஈசிஆர் மேம்பால திட்டத்தின் மதிப்பு ரூ.2,100 கோடியாகும். மொத்தமாக 13.3 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது.
இந்த உயர்மட்ட சாலை திட்டத்திற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. இந்த திட்டத்தில் ஏற்கனவே ஒப்பந்தத்தாரர் முடிவு செய்யப்பட்டுவிட்டார். இருந்தாலும் இறுதி முடிவை அரசுதான் எடுக்க வேண்டும். அதில் நாங்கள் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த ஈசிஆர் உயர்மட்ட சாலை திட்ட அரசு - தனியார் கூட்டாக செயல்படுத்தப்படுகிறது. இந்த மேம்பாலத்திற்கான 40% தொகை அரசு தரப்பில் அளிக்கப்படும். மீதமுள்ள 60% தொகை ஒப்பந்தத்தாரர் ஏற்பாடு செய்து பணிகளை முடிக்க வேண்டும். அதன்பின் சுங்கக் கட்டணம் மூலமாக அந்த தொகையை ஒப்பந்தத்தாரர் பெற்று கொள்வார்.
இந்த திட்டத்தை ரத்து செய்வது சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் விஜய்யின் கரூர் பேச்சு எந்த மேம்பால திட்டத்தை குறிக்கிறது என்பதே புரியாமல் அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மேம்பால டெண்டரில் முறைகேடு என்று விஜய் பொய் கூறியதாக திமுகவினர் பதில் அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications