Global Warming: புவி வெப்பமயமாதலை தடுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை! ஆனாலும் சிக்கல்..! புதிய ஆய்வில் தகவல்
டெல்லி: வரும் 2100ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் அரணாக மேற்குத் தொடர்ச்சி மலை மாறும் என புதியயொரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகப் பெரிய கார்பன் டை ஆக்ஸைட் வாயுவை உறிஞ்சும் வகையிலும் இந்த மலைத் தொடர் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்டவைதான் உலகை அச்சுறுத்தும் பிரச்சினைகளாக மாறியுள்ளன. இவை உலகமெங்கும் சுற்றுச்சூழலியலுக்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் அச்சுறுத்தலாகவே உள்ளது.

இதற்கு தீர்வு காண உலக நாடுகள் ஆலோசனைகளை நடத்தி வரும் நிலையில் இந்த நூற்றாண்டுக்குள் அதாவது 2100 ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் பாதுகாப்பு அரணாக மேற்கு தொடர்ச்சி மலை உருவெடுக்கும் என ஒரு ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவுகல் கடந்த 7ஆம் தேதி வெளியானது. இந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: "புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவில் உள்ள காடுகள் எந்த அளவுக்கு பங்காற்ற போகின்றன என்பதை பாருங்கள்.
காற்றில் அதிகரித்து வரும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவின் அளவு, இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு மழையின் அளவு உள்ளிட்டவை காரணமாக தாவரங்களில் ஒளிச்சேர்க்கை (photosynthesis) வேகமாக அதிகரிக்கும். அதாவது உணவு தயாரிப்புக்காக காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உறிஞ்சி தனக்குள்ளேயே சேமித்து வைத்துக் கொள்ளும். இந்த நச்சுகளை உறிஞ்சுவதில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் முக்கிய அரணாக மாறும்.
மேற்கு தொடர்ச்சி மலைகள் மட்டுமல்லாமல் இமயமலை பகுதிகள் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள காடுகளும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுக்களை உறிஞ்சும் அளவுக்கு மாறும். என்னதான் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்டவை நமக்கு அரணாக இருக்கும் என்ற செய்தி நற்செய்தியாக இருந்தாலும் காலநிலை மாற்றம் காடுகளுக்கு நன்மை செய்யும் என எடுத்துக் கொள்ளக் கூடாது.
புவி வெப்பமடைந்தால் கடுமையான வறட்சி ஏற்படும். இதனால் காடுகள் தீப்பற்றி எரியும். வெப்ப அலைகளால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கும். என்னதான் அவ்வப்போது பெய்யும் மழை செடி கொடி வளர உதவினாலும் காலநிலை மாற்றங்களால் காடுகளின் சுற்றுச்சூழல் பெரும் பின்னடைவை சந்திப்பதுடன் பல்லுயிர் பெருக்கத்திற்கும் பாதிப்பை கொடுக்கும்.
கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் தாவர உற்பத்தி திறன் என்பது அதிகரித்துள்ளது. இது 2100 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும். என்னதான் மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகள், இமயமலை காடுகள் உள்ளிட்டவை கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உறிஞ்சி சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தினாலும் புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பாதிப்புகளை இந்த நச்சு வாயுகளை உறிஞ்சுவதால் மட்டுமே சரி செய்ய முடியாது என இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications