கடைமடைக்கு வந்த காவிரி.. அறந்தாங்கி அருகே விவசாயிகள் நெல்மணி, நவதானியங்கள் தூவி வரவேற்பு
அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு பகுதிக்கு காவிரி நீர் வந்ததையடுத்து விவசாயிகள், பொதுமக்கள் நெல்மணி, பூ தூவி இன்முகத்தோடு வரவேற்றனர்.
Recommended Video
கல்லணைக் கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதற்காக 152 ஏரி, கண்மாய்களில் நீர் சேமித்து வைக்கப்பட்டு விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த ஜூன் 12-ந் தேதி மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு 16-ந் தேதி கல்லணையை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த கடைமடை பகுதி விவசாயிகளுக்கு இன்று மேற்பனைக்காடு நீர்த்தேக்க நிலையை காவிரி வந்தடைந்தது.
காவிரி நீர் வந்ததையடுத்து உற்ச்சாகமடைந்த விவசாயிகள், பொதுமக்கள் நெல்மணிகள், நவதானியங்கள், பூக்கள் தூவி வரவேற்றனர். அப்போது தெரிவித்த விவசாயிகள் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் காலத்தோடு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அதற்கு நன்றி தெரிவித்ததோடு காவிரி நீரானது கடைமடை பகுதி எல்லையான மும்பாலை வரை சென்ற பிறகு, தொடர்ந்து அனைத்து ஏரிகளும் நிரம்பும் வரை தண்ணீர் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளாவிஜயன், உதவிப் பொறியாளர் பிரசன்னா, மகேஸ்வரன், தென்றல் கருப்பையா,ஜோதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கால்வாய் கரை உடைப்பு

தண்ணீர் வந்த முதல் நாளே புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லை கிராமமான வேம்பங்குடி அருகே கால்வாயில் பெரிய உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வயல்வெளியில் பாய்கிறது. சுமார் 10 மீட்டர் அளவுக்கு உடைந்து பாய்ந்தோடுகிறது. இதனைப் பார்த்த விவசாயிகள் தடுப்பு கம்புகள் அமைத்து மணல் வைத்து அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கரையை பலப்படுத்துங்கள் என்று விவசாயகள் கோரிக்கை வைத்த போதும் கண்டுகொள்ளாததே வாய்க்கால் உடைப்புக்கு காரணம் என்கிறார்கள் விவசாயிகள். கடந்த வருடம் தஞ்சையில் சில இடங்களில் கால்வாய் கரை உடைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications