மண்வெட்டி தூக்கவும் தயார் என்கிறார் மூப்பனார்
சென்னை:
நதிகள் இணைப்புக்காக வாய்க்கால் வெட்ட, மண் வெட்டி தூக்கத்தயார் என்று சென்னையில் நடந்த விவசாயிகள் கட்சி கருத்தரங்கில் கலந்து கொண்டமூப்பனார் கூறினார்.
காவிரி பிரச்சனையும், நதிகள் இணைப்பும் என்ற கருத்தரங்கு வியாழக்கிழமை சென்னை பாரதீய வித்யா பவனில் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள்தொழிலாளர்கள் கட்சி சார்பில் நடந்த இந்த கருத்தரங்குக்கு அதன் தலைவர் பொன்குமார் தலைமை தாங்கினார்.
கருத்தரங்கை தொடங்கி வைத்து த.மா.கா தலைவர் மூப்பனார் பேசியதாவது.
கங்கை காவிரி இணைக்கும் முயற்சியில் குமரி அனந்தன் ஈடுபட்டு உள்ளார். தென்னக நதிகளை இணைக்கிற முயற்சியில் நாம் இறங்கியிருக்கிறோம். அவர்இந்திய நதிகளை எல்லாம் இணைக்க பாடுபடுகிறார்.
இப்படி நதிகளை இணைக்கின்ற முயற்சியால் எனக்குத்தான் அதிக லாபம்? அதாவது தஞ்சைக்குத்தான் அதிக லாபம். இந்த முயற்சி நல்ல முயற்சி. இதுநடக்குமா? நடக்காதா என்பது வேறு விஷயம். மற்ற மாநிலங்களில் தண்ணீர் வீணாக கடலில் போய் விழுகின்றன. ஆனால் அதை அவர்கள் நமக்குகொடுக்க மறுக்கிறார்கள். பல வருடத்துக்கு பிறகு தங்களுக்கு தேவைப்படும் போது யாரும் தரமாட்டார்கள். ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன்.
இந்தக்காரியம் நடந்தால் நாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒன்று தான் என்ற சகோதர உணர்வு, ஒற்றுமை உணர்வும் ஏற்படும். நாட்டில்உள்ள உணவு பிரச்சனைகளும் தீரும். உணவுக்காக யாரையும் கையேந்தாமல் மானத்தோடு வாழும் சூழ்நிலை உருவாகும்.
இதே போன்று உதயமூர்த்தியும் ஒரு கருத்தரங்கை நடத்தினார். அவருடன் பொன்குமாரும் சேர்ந்து இந்த முயற்சியில் ஈடுபடவேண்டும். அந்த முயற்சிக்குநாங்கள் துணையாக இருப்போம். கருத்தரங்கை தொடங்கிவைப்பதில் மட்டுமல்ல நீங்கள் வாய்க்கால் வெட்டப்புறப்பட்டால் நானே முதலில் மண்வெட்டிதூக்கிக் கொண்டு வருவேன் என்று பேசினார் மூப்பனார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு பேசும் பொழுது, இப்பொழுது உள்ள சூழ்நிலையில் நதிகள் இணைப்பு பிரச்சனைகள் கூட தள்ளிவைக்கப்பட்டுவிட்டது.
வீரப்பன் பிடித்து வைத்துள்ள நடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்பட வேண்டும். அவர் விடுவிக்கப்படா விட்டால் தமிழக, கர்நாடக மக்கள் இடையே பிரச்சனைஏற்படும். எனவே முதலில் நாட்டை பற்றி கவலைப்பட வேண்டும். நாட்டின் பிரச்சனைக்காக காட்டில் உள்ள வீரப்பனிடம் முறையிட வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.
எனவே சாதி கட்சிகள், சாதி சங்கங்கள் இதை எல்லாவற்றையும் விட்டுவிட்டு நாட்டு ஒற்றுமைக்காக பாடுபடவேண்டும். ஒற்றுமை உணர்வுஏற்பட்டால் தான் சமூக விரோதிகள் தலையெடுக்க முடியாது. நதிகளை இணைத்தால் தான் வறுமை நீங்கும். காவிரி பிரச்சனை தீரும்.
இந்த கருத்தரங்கில் முன்னாள் தமிழக காங்கிரஸின் தலைவர் குமரி அனந்தன், அ.தி.மு.க வின் கொள்கை பரப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியன், திராவிடக்கழகத்தலைவர் கீ.வீரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications