மதுரையில் ரூ. 20 கோடியில் நெல் விற்பனை மையம்
கோவை:
மதுரையில், ரூ. 20 கோடி மதிப்பில் நெல் விற்பனை வணிக மையம் அமைக்கப்படவுள்ளது.
கோவையில் கடந்த 6 நாட்களாக நடந்து வந்த அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சி 3-ம் தேதியுடன் முடிவடைந்தது. கண்காட்சியில், நூற்றுக்கும் மேற்பட்டஅரங்குகள் இடம் பெற்றன. இந்த அரங்குகளில் விவசாயக் கண்காட்சிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த விளக்கங்கள் இடம் பெற்றிருந்தன.
கண்காட்சியையொட்டி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு மாதங்களாக விவசாய விதைகளை பயிரிட்டு காட்சிக்குவைத்திருந்தது. காளான் வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, தேனி வளர்த்தல், தீவனப் பயிர்கள், நெல் பயிர் மற்றும் பண்ணைக் கருவிகள் இடம் பெற்றிருந்தன.
கண்காட்சியில் இடம் பெற்றிருந்த அரங்குகளை 2.5 லட்சம் பேர் பார்வையிட்டனர். 50 முதல் 70 கோடி ரூபாய் வரை வர்த்தக விசாரணைகள் வந்தன.பூக்கள் வகைகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
கண்காட்சியில் ஸ்பிக் நிறுவனம், திசு வளர்ப்பு மூலம் வாழை உட்பட மலர்ச் செடிகளை உருவாக்குவது குறித்து விளக்கம் அளித்தது. கண்காட்சியின் நிறைவுவிழா ஆகஸ்ட் 3ம் தேதி நடந்தது.
விழாவில், தமிழ்நாடு வேளாண்மைத் துறைச் செயலர் ஆதிமூலம் பேசுகையில், இந்தியாவிலேயே அரிசி அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழ்நாடுமாறியுள்ளது. இந்த வெற்றிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பம் தான் காரணம்.
புதிய நெல் ரகங்களை தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் பழைய பல நெல் ரகங்கள் மறைந்து போகும் சூழ்நிலைஉருவாகியுள்ளது.
தென்னையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வந்த ஈரியோபைடு நோயைக் கட்டுப்படுத்த வேளாண்மைப் பல்கலைக் கழகம் புது மருந்து ஒன்றைக்கண்டுபிடித்துள்ளது. விரைவில் எதிர் உயிரி வகை ஒன்றையும் வெளியிட உள்ளது.
தமிழக அரசு வேளாண்மைப் பொருட்களை விற்பனை செய்ய பல்வேறு இடங்களில் விற்பனை மையங்களை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் தென்னைவிற்பனை வளாகம் ஒன்றையும் அமைக்க முடிவு செய்துள்ளது.
இது தவிர மதுரையில் நெல் விற்பனை வணிக மையம் ரூ.20 கோடி ரூபாய் செலவிலும், பெருந்துறையில் ரூ. 30 கோடி செலவில் மஞ்சள் வணிக மையமும்ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல லட்சம் ஹெக்டேர் நிலங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாமல் உள்ளது. இத்தகைய தரிசு நிலங்களை மேம்படுத்த அரசு முடிவுசெய்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் ஏக்கர் நிலங்களை பயனுள்ள நிலங்களாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
விழாவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கண்ணையன், கொடீசியாத் தலைவர் ஜெகநாதன், காமராஜ், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் இணை இயக்குநர் ரோஜர் பாக்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.