கரும்பிலிருந்து எரிபொருள் தயாரிக்க கோரிக்கை
கோவை:
பெட்ரோலுக்குப் பதிலாக கரும்பிலிருந்து தயாராகும் கேஸோஹால் என்ற எரிபொருளைத் தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கரும்புவிவசாயிகள் புதிய பிரச்னையைக் கிளப்பியுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெட்ரோலுக்குப் பதிலாக கேஸோஹால் என்ற எரிபொருளைப் பயன்படுத்த முடியும். இந்த கேஸோஹால், கரும்பு விவசாயிகளுக்கு லாபம் ஈட்டக்கூடியதாக அமையும்.
இத்தகைய எரிபொருளை கரும்பு கழிவுப் பொருட்களில் இருந்து எளிதாகப் பெற முடியும். பிரேசில் நாட்டில் 40 சதவீதம் கேஸோஹால் தான்பயன்படுத்தப்படுகிறது.
இதனால் பெருமளவு அந்நியச் செலாவணி அரசுக்கு மிச்சமாகிறது. இதே போன்று இந்தியாவிலும் கேஸோஹால்பயன்படுத்த அரசு அனுமதிக்கவேண்டும். கேஸோஹால் உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
சர்க்கரை உற்பத்தியில் நமது நாடு தன்னிறைவு அடைந்து விட்டது. தேவைக்கு மேலாகவே உற்பத்தி செய்து வருகிறோம். இந்தியாவின் ஆண்டு தேவை145 லட்சம் டன் சர்க்கரை தான். ஆனால் இப்போது உற்பத்தியாவது 185 லட்சம் டன்னாக உள்ளது.
மத்திய அரசு கடைபிடித்து வரும் தவறான கொள்கையால், இப்போது சர்க்கரை இறக்குமதி செய்யப்படுகிறது. இது தேவையற்றது. மேலும்,விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை இந்த இறக்குமதி ஏற்படுத்தி வருகிறது என கூறப்பட்டுள்ளது.