தெலுங்கானாவில் பாதுகாப்பு குளறுபடி.. அமைச்சர் அமித்ஷா காரை வழிமறித்த மர்ம கார்.. யாருடையது தெரியுமா?
ஹைதராபாத்: தெலுங்கானாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன் தினம் மாலை தெலுங்கானாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் ஹைதராபாத் அருகே பேகம்பேட்டில் உள்ள ஹோட்டலுக்கு சென்றார்.
அமித்ஷாவின் வாகன அணிவகுப்பு அந்த ஹோட்டலுக்கு செல்ல முயன்ற போது வழியில் இடையூறாக ஒரு மர்ம கார் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் அமித்ஷாவின் வாகன அணிவகுப்பு அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது.

அமித்ஷாவின் பாதுகாப்பு அதிகாரிகள்
இதையடுத்து அந்த காரை அமித்ஷாவின் பாதுகாப்பு அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். விசாரணையில் அந்த கார் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் கோசுலா சீனிவாஸ் யாதவிற்கு சொந்தமானது என தெரியவந்தது. இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் அமித்ஷாவின் கார் செல்லும் பாதையில் காரை நிறுத்திய டிஆர்எஸ் தலைவர் அவரது பாதுகாப்பில் குளறுபடியை ஏற்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியௌ ஏற்படுத்தியுள்ளது.

சூறையாடப்பட்ட கார்
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தனது காரை அமித்ஷாவின் பாதுகாப்பு அதிகாரிகள் சூறையாடிவிட்டதாக டிஆர்எஸ் தலைவர் கோசுலா புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து கோசுலா கூறுகையில் அமித்ஷா செல்லும் வழியில் எனது கார் சென்று கொண்டிருந்தது.

நடுவழியில்
அப்போது அதுவே தானாக நடுவழியில் நின்றுவிட்டது. நான் வேண்டுமென்றே நிறுத்தவில்லை. நான் காரை எடுக்க எல்லா வகையிலும் முயற்சித்தேன். ஆனால் என்னால் ஸ்டார்ட் செய்யவே முடியவில்லை. இத்தனை முயற்சிகள் நடந்து கொண்டிருந்த போதே எனது காரின் கண்ணாடிகளை அமித்ஷாவின் பாதுகாவலர்கள் சேதப்படுத்தினர்.

புகைப்படம்
நான் இதுகுறித்து போலீஸில் தெரிவிப்பேன் என கூறியுள்ளார். இந்த நிலையில் டிஆர்எஸ் தலைவர் கோசுலா காரில் உட்கார்ந்திருப்பது போலும் கார் கண்ணாடிகள் சேதமடைந்தது போலும் புகைப்படம் வைரலாகி வருகிறது. எனினும் டிஆர்எஸ் தலைவர் கோசுலாவின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.

பாஜக எம்பி மறுப்பு
இதுகுறித்து பாஜக எம்பி கே லட்சுமணன் கூறுகையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பு குளறுடிக்கு முழு பொறுப்பு தெலுங்கானா மாநில அரசுக்கு உண்டு. நாட்டின் உள்துறை அமைச்சரின் பாதுகாப்பிலேயே பிரச்சினை என்றால் இவர்கள் மாநில மக்களை எப்படி பாதுகாப்பார்கள் என்பதை நினைத்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இதே போல் அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சென்ற போதும் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது என்றார். அமித்ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியையும் தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.












Click it and Unblock the Notifications