விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தேவை: பாமக எம்.பி.
நெல்லை: தமிழக அரசு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போடவேண்டும் என நெல்லையில் பாமக எம்பி பொன்னுச்சாமி தெரிவித்தார்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை சார்பில் டவுனில் நடந்த கருப்பு கொடி ஊர்வலத்தில் கலந்து கொள்ள பாமக எம்பி பொன்னுசாமி நெல்லை வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில், 2011ல் திருச்சி முதல் குமரி வரையுள்ள தென்மாவட்டங்களில் இருந்து 10 எம்எல்ஏக்கள் பாமக சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் இருவர் நெல்லை மாவட்டத்தில் இருந்து செல்வார்கள்.
அரிதார பூச்சு, ஆடம்பரம், இலவசம் ஆகியவற்றிக்கு மயங்காத மக்கள் மாற்று சக்தியாக பாமகவை நினைக்கிறார்கள். பாமகவிற்கு இலவசத்தில் நம்பிக்கை இல்லை. கல்வியை மட்டும் ஆரம்பத்தில் இருந்து பட்டப்படிப்பு வரை இலவசமாக வழங்க வேண்டும்.
இலங்கை பிரச்சனையில் பாமக கொள்கை நிரந்தர போர் நிறுத்தம்தான். அதற்கு ஏற்றர்போல் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.
பள்ளி, கல்லூரி அருகில் இருக்கும் டாஸ்மக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். இல்லாவிட்டால் மார்ச் 7க்கு பிறகு எனது தலைமையில் அந்த டாஸ்மக் கடைகள் பூட்டப்படும் போராட்டம் நடைபெறும்.
தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட வேண்டும் என்றார் பொன்னுச்சாமி.












Click it and Unblock the Notifications