மட்டன் இல்லீங்க.. சைவ ஆட்டுக்கால்.. மூட்டுகளின் பாதுகாவலன் ஆட்டுக்கால் கிழங்கு சூப் இப்படி செய்யுங்க
சென்னை: முடவன் ஆட்டுக்கால்களை எப்படி சமைக்க வேண்டும் தெரியுமா? அதன் பயன்களும், மருத்துவ குணங்களும் என்னென்ன தெரியுமா?
ஆட்டுக்கால் சைவம் அல்லது சைவ ஆட்டுக்கால் அல்லது முடவன் ஆட்டுக்கால், அல்லது ஆட்டுக்கால் கிழங்கு என்றெல்லாம் இதற்கு பெயர். ஏற்காடு மலைவாசிகள் இதனை ஆட்டுக்கால் சைவம் என்பார்கள்.. சேர்வராயன் மலையில், இதனை "ஆட்டுக்கால்" என்பார்கள். கொல்லி மலையில் "முடவன் ஆட்டுக்கால்" என்பார்கள்.

கிழங்குகள்: ஆனால், ஆட்டுக்கால் கிழங்கு என்று சொன்னாலும், இது கிழங்கு வகை கிடையாது. இது ஒரு தாவரம்.. இது மலைப்பகுதிகளில் மட்டுமே வளரக்கூடியது.. குறிப்பாக, ஏற்காடு, கொல்லிமலை, சேர்வராயன் மலை, சதுரகிரி மலை, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விளையக்கூடியது. அதுவும் பாறை இடுக்குகளில் மட்டுமே இது வளரும்..
பார்ப்பதற்கு கம்பளி போர்த்தியதுபோலவும் காணப்படும்.. மேலும் ஆட்டின் கால் குளம்புகளைப்போலவே இருக்கும். இதன் ருசியும் ஆட்டுக்கால் போலவே இருக்கும்... அதனால்தான், இந்த பெயர் வந்ததே தவிர, ஆட்டுக்கும், இந்த ஆட்டுக்கால் கிழங்குக்கும் சம்பந்தமே கிடையாது. கால்சியம், வைட்டமின், பாஸ்பரஸ், புரதம், தாது உப்புக்கள் என பல சத்துக்கள் இந்த கிழங்கில் நிறைந்துள்ளன... முடக்கு வாதத்துக்கும், மூட்டு வலிகளுக்கும், அசதி, தசைபிடிப்புகளுக்கும் இந்த கிழங்கு மிகவும் நல்லது.
முடவன் ஆட்டுக்கால் சூப் என்றாலே, மலைப்பகுதிகளில் மிகவும் பிரபலம். எலும்பு, நரம்பு, தசைகளில் ஏற்படும் கோளாறுகளுக்கும், காய்ச்சல், செரிமான பிரச்சனைகளுக்கும், மிகவும் நல்லது. எலும்பு அடர்த்திக்குறைவு (Osteopenia) நோயை தடுக்கும் சக்தி இந்த கிழங்கிற்கு இருக்கிறதாம்.. ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ குணமும் இதில் இருப்பதால், கிழங்கிற்கு மவுசு அதிகரித்தபடியே உள்ளன..
எப்படி சுத்தம் செய்வது: முடவன் ஆட்டுக்கால் கிழங்கின் மீதுள்ள தோல் மற்றும் முடிகளை நீக்கிவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும். தோலை சீவினில், உள்ளே மஞ்சள் கலரில் கிழங்கு தெரியும். இதை கழுவி சமையலுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். சாக்குத்துணியில் சிறிது மணலையும் போட்டு வைத்து, இந்த கிழங்கை மூடிவைத்தால் 6 மாதம்வரை கெடாமல் இருக்குமாம்.. கிலோ 150 முதல் 350 ரூபாய் வரை சொல்கிறார்கள்.
சூப் வைப்பது எப்படி: தோல் நீக்கிய இந்த கிழங்கை, பேஸ்ட்போல் அரைத்து கொண்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி கொதிக்க வேண்டும். பிறகு, மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றை அரைத்துக்கொண்டு, அதையும், இந்த கிழங்கிலேயே கொட்டி வேகவைக்க வேண்டும்.. இறுதியில், கல் உப்பு, கொத்தமல்லி தூவி இறக்கினால் சைவ ஆட்டுக்கால் சூப் ரெடி..
அல்லது வேறு வகையிலும் சூப் செய்யலாம்.. இஞ்சி, பூண்டு, சிறிது தேங்காய் சேர்த்து பேஸ்ட்போல அரைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் எண்ணெய், லவங்கப்பட்டை, சாம்பார் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, சுத்தம் செய்து வைக்கப்பட்ட முடவாட்டுக்காலையும், அரைத்து வைத்துள்ள விழுதையும் கொட்டி, ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.. நன்றாக கொதித்தபிறகு, கடைசியாக பூண்டு, உப்புத்தூள், மிளகு தூள் சேர்த்து இறக்கினால் சூப் ரெடி.
ரசம்: இந்த கிழங்கில் ரசம் அல்லது சாறு போலவும் தயாரிக்கலாம். மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், என அனைத்தையும் வதக்கி கொள்ள வேண்டும். பிறகு அதிலேயே சுத்தம் செய்து பொடிபொடியாக நறுக்கப்பட்ட கிழங்கையும் போட்டு வதக்க வேண்டும்.
தண்ணீர் தாகம்: பிறகு, சோம்பு, பட்டை, சேர்த்து, வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஆறவைத்து மொத்தமாக அரைத்து கொள்ள வேண்டும். எவ்வளவு தண்ணீர் வேண்டுமோ, அவ்வளவு ஊற்றி இந்த விழுதை கொதிக்க வைத்து இறக்கிவிட வேண்டும்.
இந்த கிழங்கில், சட்னி செய்யலாம்.. துவையல் போல அரைத்து பயன்படுத்தலாம். இந்த கிழங்கை சிறு சிறு துண்டுகளாக்கி, வாயில் அடக்க வைத்து கொண்டால், தண்ணீர் தாகமே எடுக்காதாம்.. சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி காய வைத்து இடித்து பொடியாக செய்து வைத்து கொண்டால், எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
கை, கால் வலி, காய்ச்சல் என்றெல்லாம் மலைவாசிகள் ஆஸ்பத்திரிக்கே போனதில்லையாம்.. இந்த கிழங்கை உடனே சூப் வைத்து குடித்துவிடுவார்களாம். பக்கவிளைவுகளை தராதது இந்த கிழங்கு என்கிறார்கள் மலைவாழ்மக்கள்.
அனுமதி கிடையாது: சுற்றுலா பயணிகள் கொல்லி மலை அருவியில் குளித்துவிட்டு, இந்த சூப்பை குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கிறதாம்.. அழிந்து வரும் இந்த மூலிகை கிழங்கை பாதுகாக்க வேண்டும் என்பதால், இந்த கிழங்கை எடுப்பதற்கு வனத்துறையினர் அனுமதிப்பதில்லையாம்.. இதனால் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் இந்த முடவன் ஆட்டுக்கால் கிழங்கு பயிரிடப்படுவதாக சொல்கிறார்கள்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications