சும்மாவே ஆடுவாரு டிரம்ப்.. இப்போ சலங்கை வேற கட்டி விட்டாங்க! வேற லெவல் பவர்.. தாராளம் காட்டிய கோர்ட்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தனி அதிகாரம் பெற்ற கூட்டாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்களை அதிபர் டொனால்டு டிரம்ப் தனது விருப்பப்படி பதவியில் இருந்து நீக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தொடர்பான நியமனத்தில் மட்டும் விதிவிலக்கை அறிவித்துள்ளது.
அமெரிக்க கூட்டாட்சி வர்த்தக ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் ரெபேக்கா ஸ்லாட்டர், குறிப்பிட்ட காரணம் இல்லாமல் தன்னை டொனால்டு டிரம்ப் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார்.
இதுவரை அமெரிக்காவில் வர்த்தக ஆணையம் போன்ற தனி அதிகாரம் கொண்ட அமைப்புகளின் உறுப்பினர்களை நீக்குவதற்கு தெளிவான காரணம் இருக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

அமெரிக்க உச்ச நீதிமன்றம்
இதனால், தன்னை டொனால்ட் ட்ரம்ப் நீக்கியது செல்லாது என அறிவிக்க கோரி ரெபேக்கா ஸ்லாட்டர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் தற்போது இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வெளியாகி உள்ளது. ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஆறு பழமைவாத நீதிபதிகள் பெரும்பான்மையாக உள்ள நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் 91 ஆண்டுகளாக அமலில் இருந்த முக்கிய சட்டம் மாற்றப்பட்டுள்ளது.
அதிபர் அதிகாரம்
குறிப்பாக, அமெரிக்க அரசியலமைப்பின் அதிகாரப் பிரிப்பு கொள்கைக்கு இந்த பாதுகாப்பு முரணானது என்று தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பின் மூலம் தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியம், நுகர்வோர் பொருட்கள் பாதுகாப்பு ஆணையம், கூட்டாட்சி பணியாளர் பாதுகாப்பு வாரியம் உள்ளிட்ட பல தனி அதிகாரம் கொண்ட அமைப்புகளின் தலைவர்களை அதிபர் எளிதாக நீக்குவதற்கான அதிகாரம் கிடைத்துள்ளது.
டொனால்டு டிரம்ப்
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை டொனால்டு டிரம்ப் வரவேற்றுள்ளார். தனது சமூக வலைதள பதிவில், "அதிபரின் அதிகாரம் தொடர்பாக வழங்கப்பட்ட மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளில் இதுவும் ஒன்று. இந்த தீர்ப்பைப் பெற்ற காலத்தில் அமெரிக்க அதிபராக இருப்பது எனக்கு பெருமை" என்று தெரிவித்துள்ளார். ஆனால், இந்த வழக்கில் ஒரு முக்கிய விதிவிலக்கையும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
பெடரல் ரிசர்வ்
முன்னாள் அதிபர் ஜோ பைடன் நியமித்த பெடரல் ரிசர்வ் ஆளுநர் லிசா குக்கை உடனடியாக பதவியில் இருந்து நீக்க டிரம்ப் மேற்கொண்ட முயற்சிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. வீட்டு கடன் ஆவணங்களில் முறைகேடு செய்ததாக லிசா குக் மீது டிரம்ப் நிர்வாகம் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், அந்த குற்றச்சாட்டை லிசா குக் மறுத்துள்ளார். மேலும், அவர் மீது எந்த குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் தொடர்ந்துள்ள வழக்கு முடிவடையும் வரை லிசா குக் தனது பதவியில் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் 5-4 என்ற வித்தியாசத்தில் தீர்ப்பளித்துள்ளது.
லிசா குக்
இந்த வழக்கில் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், நீதிபதி பிரெட் கவனா மற்றும் மூன்று நீதிபதிகள் லிசா குக்கிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். பெடரல் ரிசர்வ் ஆளுநரை எந்த நேரத்திலும், எந்த காரணமும் இல்லாமல் நீக்க அனுமதித்தால், அந்த அமைப்பின் தனித்தன்மை முற்றிலும் பாதிக்கப்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
வட்டி விகிதம்
டிரம்ப் நிர்வாகம் பெடரல் ரிசர்வ் மீது கட்டுப்பாட்டை அதிகரிக்க முயற்சிப்பதாக அவரது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். லிசா குக்கை நீக்க முடிந்தால், அவருக்கு பதிலாக தனது விருப்ப நபரை நியமித்து வட்டி விகித முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதே இந்த முயற்சியின் பின்னணி என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஜெரோம் பவல்
முன்னதாக, பெடரல் ரிசர்வ் முன்னாள் தலைவர் ஜெரோம் பவலுடனும் டிரம்ப் நிர்வாகம் மோதலில் ஈடுபட்டிருந்தது. வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த டிரம்ப், அதை செய்யாததால் பவலை பதவியில் இருந்து நீக்குவேன் என்றும் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் அதிகாரம்
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, அமெரிக்க அதிபரின் நிர்வாக அதிகாரத்தை குறிப்பிடத்தக்க அளவில் விரிவுபடுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், பெடரல் ரிசர்வ் போன்ற முக்கிய பொருளாதார அமைப்புகளின் தனித்தன்மையை நீதிமன்றம் பாதுகாத்திருப்பதும் கவனிக்கத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications