கொஞ்சம் ரெஸ்ட் விட்டு அடிங்கப்பா.. கழகத்தில் கலகம் செய்யும் வேலுமணி! எடப்பாடிக்கு எத்தனை சிக்கல்?
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி அணிகள் மீண்டும் இணைந்த பிறகும், கட்சிக்குள் இருந்த அதிருப்தி முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்ற பேச்சு மீண்டும் அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது. கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது ஆதரவாளர்களை திடீரென ஒன்றுகூட்டி ஆலோசனை நடத்தியிருப்பது, அந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இன்னும் எடப்பாடி மீது வேலுமணி அதிப்தியில் தான் உள்ளார் எனவும், இன்னும் சில நாட்களில் கழகத்தில் கலக்ம் வெடிக்கும் என்கின்றனர் கொங்கு மண்டல ரத்தத்தின் ரத்தங்கள்..
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதலின் காரணமாக, எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு தனி அணி உருவானது. அந்த அணியில் இருந்த 25-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும், பல மாவட்டச் செயலாளர்களும் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டனர்.

பின்னர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இரு அணிகளும் மீண்டும் இணைந்தன. இணைப்பு ஏற்பட்ட பிறகு, எஸ்.பி. வேலுமணி தரப்பினருக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், பல ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் அதே பதவியை வழங்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி
விலகி பின்னர் கட்சியில் சேர்ந்தவர்கள், தங்கள் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டாலும், பழைய மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்தனர். ஆனால், அதனை எடப்பாடி பழனிசாமி செய்யவில்லை. இந்த நிலையில் தான், கோவையில் நேற்று வேலுமணி டீமின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால், இந்தாக் கூட்டத்தில் அதிமுக கட்சிக் கொடி , பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் புகைப்படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்பி வேலுமணி
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எஸ்பி வேலுமணி, "தேர்தலில் கட்சிக்காக இரவு பகலாக உழைத்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவும், அவர்களுடன் மதிய உணவு பகிர்ந்து கொள்ளவும் மட்டுமே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை. கூட்ட அரங்கிற்குள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெற்றிருந்தன" என்று விளக்கம் அளித்தார்.
மாவட்டச் செயலாளர்
ஆனால், கூட்டத்தில் பங்கேற்ற சில நிர்வாகிகள் கூறிய தகவல்கள் வேறுவிதமாக இருந்தது. கூட்டம் தொடங்கியதிலிருந்தே எஸ்.பி. வேலுமணி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்ததாகவும், பேசிய பெரும்பாலான நிர்வாகிகள் அனைவரும் மாவட்டச் செயலாளர் பதவி குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக
அந்தக் கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி, கடந்த சில மாதங்களில் கட்சியில் நடந்த முக்கிய அரசியல் சம்பவங்களை நினைவுகூர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே மீண்டும் இணைந்ததாகவும், அதிமுக தனது அடிப்படை கொள்கையில் இருந்து விலகக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
தொண்டர்களிடம் வேதனை
மேலும், "21 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக பணியாற்றியுள்ளேன். இன்று வேறு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நான் எப்போதும் அதிமுக உறுப்பினராகவே இருப்பேன். என்னை நம்பி இருக்கும் நிர்வாகிகளுக்கு தொடர்ந்து துணையாக இருப்பேன். ஆனால் தவறு நடந்தால் அதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது" என்ற கருத்தையும் அவர் தெரிவித்ததாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகின்றனர்.
கட்சிக்குள் குழப்பம்
அதேநேரத்தில், மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் வழங்கினால்தான் கட்சியை முழு திறனுடன் இயக்க முடியும் என்ற கருத்தையும் அவர் பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பதவி தொடர்பான அதிருப்தி இன்னும் தீராத பிரச்சினையாகவே இருப்பது வெளிப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கூட்டத்தின் போது சில நிர்வாகிகள், கட்சிக்குள் சமூக வலைதளங்கள் மூலம் திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்தப்படுவதாகவும், குறிப்பிட்ட சில வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் தங்களை அவமதிக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
அடுத்தகட்ட நடவடிக்கை
இதுபோன்ற செயல்கள் தொண்டர்களின் மனநிலையை பாதிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு எஸ்.பி. வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளையில், பழைய மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையில் அவர் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மீண்டும் அதிருப்தி
அதிமுகவில் அணிகள் இணைந்தாலும், பொறுப்புகள் தொடர்பான அதிருப்தி இன்னும் முழுமையாக அடங்கவில்லை என்பது இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏற்கனவே பல முன்னாள் அமைச்சர்கள் கட்சியை விட்டு விலகியுள்ள நிலையில், தற்போது எஸ்.பி. வேலுமணி அணியிலும் அதிருப்தி மீண்டும் தலைதூக்கியிருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சவாலாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications