தயாளு அம்மாள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. பதறியடித்து ஓடி வந்த மு.க.ஸ்டாலின், உதயநிதி!
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மனைவியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்திலும், திமுக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயது முதிர்வு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த தயாளு அம்மாள், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

திடீர் உடல்நிலை பாதிப்பு
இந்நிலையில், தயாளு அம்மாளுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவுகாரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான முதலுதவிகள் வழங்கப்பட்டு, தற்போது மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதறியடித்து வந்த குடும்பத்தினர்
தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்தவுடன், திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தனர். தனது தாயாரின் உடல்நிலை குறித்து அறிவதற்காக மருத்துவமனைக்கு வந்த மு.க.ஸ்டாலின், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அங்குள்ள மூத்த மருத்துவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பலரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
தயாளு அம்மாளுக்கு சிகிச்சை
கடந்த 2018 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, தயாளு அம்மாளின் உடல்நிலை மேலும் நலிவடைந்தது. அல்சைமர் உள்ளிட்ட வயது முதிர்வு சார்ந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வந்த அவருக்கு, கோபாலபுரம் இல்லத்திலேயே பிரத்யேக மருத்துவ உபகரணங்களுடன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. அவ்வப்போது ஏற்படும் சிறு உடல்நலக் குறைவுகளுக்காக மட்டுமே அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவது வழக்கம்.
தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தயாளு அம்மாளின் தற்போதைய மருத்துவ நிலை குறித்த விரிவான அறிக்கை விரைவில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications