இப்பதான் நிம்மதி.. மும்மொழி கொள்கையால் வந்த குழப்பம்! மாணவர்கள் வயிற்றில் பாலை வார்த்த சிபிஎஸ்இ
டெல்லி: மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டிருந்த மும்மொழித் திட்ட விதிகளால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அவற்றில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 7, 8 மற்றும் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், 10-ம் வகுப்பை அடையும்போது மூன்றாவது மொழிக்கு பொதுத் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை என்று சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் நாடு முழுவதும் பள்ளிக் கல்வியில் பல்வேறு மாற்றங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 2026-27 கல்வியாண்டு முதல் 6-ம் வகுப்பிலிருந்து மும்மொழித் திட்டம் அமலுக்கு வரும் என்று சிபிஎஸ்இ கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பில், மாணவர்கள் கற்கும் மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஒரு பள்ளி 6-ம் வகுப்பில் எந்த மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்துகிறதோ, அதே மொழியே அந்த பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் விருப்பப் பாடமாக தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிபிஎஸ்இ
இதற்கிடையே, கடந்த மே 15-ம் தேதி வெளியிடப்பட்ட மற்றொரு சுற்றறிக்கையில், ஜூலை 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழித் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இந்த திடீர் அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் மாணவர்கள் என்ன செய்வார்கள், மூன்றாவது மொழிக்கு பொதுத் தேர்வு கட்டாயமா என்ற கேள்விகள் எழுந்தன.
மும்மொழி கொள்கை
இந்த நிலையில், அந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிபிஎஸ்இ தற்போது புதிய விளக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி, தற்போது 10-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு புதிய மும்மொழித் திட்ட விதிகள் பொருந்தாது. அவர்கள் பழைய நடைமுறையிலேயே கல்வியைத் தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது 7, 8 மற்றும் 9-ம் வகுப்புகளில் படித்து வரும் மாணவர்கள், 10-ம் வகுப்புக்கு செல்லும்போது மூன்றாவது மொழிக்கு பொதுத் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்திய மொழிகள்
அதேநேரத்தில், 9-ம் வகுப்பில் இருந்து மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்ற விதி தொடரும். ஆனால், அதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் படித்து வரும் மாணவர்கள், மூன்றாவது மொழியாக ஒரு இந்திய மொழியை சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் இந்திய மொழிக்கு பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டு முறை மட்டுமே பின்பற்றப்படும். அதாவது, இந்த மொழிக்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தனியாக தேர்வு எழுத வேண்டிய அவசியம் இருக்காது.
புதிய பாடத்திட்டம்
இந்த இடைக்கால தளர்வு தற்போது 9-ம் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களுக்கும் பொருந்தும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் விளக்கியுள்ளது. மேலும், புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப தேவையான பாடப்புத்தகங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என்றும் சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது.
மும்மொழித் திட்டம்
சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள இந்த புதிய அறிவிப்பு, மும்மொழித் திட்டம் தொடர்பாக கடந்த சில வாரங்களாக நிலவி வந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. குறிப்பாக, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மூன்றாவது மொழி கட்டாயமாக இருக்கும் என்ற அச்சத்தில் இருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மும்மொழித் திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் சிபிஎஸ்இ மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications