“முதல்வர் விஜய் மதிமுக MLAக்களை பதவி விலகச் சொல்லவில்லை.. நான்தான் சொன்னேன்” - வைகோ பல்டி
சென்னை: "மதிமுக எம்.எல்.ஏக்களை முதலமைச்சர் விஜய் பதவி விலகச் சொல்லவில்லை.. எம்எல்ஏக்கள் இருவரை நானே பதவி விலகச் சொன்னேன். பதவி விலகும் எம்எல்ஏக்களின் வெற்றிக்கு பிரச்சாரம் செய்ய வர வேண்டும் என கேட்டுக்கொண்டேன். நேரம் வரும்போது பிரசாரத்துக்கு வருகிறேன் என முதல்வர் விஜய் சொன்னார்" என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கு, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. கூட்டணி கட்சிகளை இழுத்ததால், தவெகவை 'சோபா மாடல் ஆட்சி' என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து வருகிறார்.

சட்டமன்றத் தேர்தலில் மதிமுக, திமுக கூட்டணியில் இணைந்து 4 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இதில் சீர்காழி மற்றும் கடையநல்லூர் ஆகிய 2 தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது. எனினும், உதயசூரியன் சின்னத்தில் நின்றதால், அக்கட்சி எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கவில்லை.
அண்மைக்காலமாகவே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக கூட்டணி குறித்து பல்வேறு அதிருப்திகளை வெளிப்படுத்தி வந்தார். தங்களை விட பலம் குறைந்த பிற கூட்டணி கட்சிகளுக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட போதும், தன்மானத்தைச் சமரசம் செய்து கொண்டுதான் திமுக கூட்டணியில் தொடர்ந்ததாக அவர் ஆதங்கப்பட்டிருந்தார்.
மதிமுக முதன்மைச் செயலாளரும், எம்.பி-யுமான துரை வைகோ அண்மையில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தார். அப்போது தன் தொகுதிக்கு உட்பட்ட சில கோரிக்கைகளையும் முதலமைச்சர் விஜய்யிடம் முன்வைத்தார். இதனைத்தொடர்ந்து தான் வைத்த கோரிக்கைகளை அடுத்த நாளே முதலமைச்சர் விஜய் செயல்படுத்த துவங்கிவிட்டார் என துரை வைகோ கூறியிருந்தார்.
இதையடுத்து அண்மையில் சென்னையில் நடந்த மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்துத் தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படவும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 9 ஆண்டுகள் பயணித்து வந்த திமுக - மதிமுக கூட்டணி முடிவுக்கு வந்தது.
பொதுக்குழு முடித்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த வைகோ, "முதல்வரை சந்தித்து நான் பேசிய போது, 2 எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்தால் இடைத்தேர்தல் வரும், அந்த தேர்தலில் நானே உங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கிறேன் என்று சொன்னார். இதைச் சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வனிடம் சொன்ன போது, அவர் திமுக-வில் தான் இணையப்போகிறேன் எனச் சொல்லிவிட்டார். கடையநல்லூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மதிமுக-வில் இருப்பதாகவும் எம்.எல்.ஏ-வாக தொடர்வதாகவும் சொன்னார்" என்றார்.
"ம.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், இடைத்தேர்தலில் உங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து அவர்களை வெற்றி பெற வைக்கிறேன்" என முதல்வர் விஜய் தன்னிடம் கூறியதாக வைகோ கூறியது, முதல்வர் விஜய் தரப்பை கோபமடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "மதிமுக எம்.எல்.ஏக்களை முதலமைச்சர் விஜய் பதவி விலகச் சொல்லவில்லை.. எம்எல்ஏக்கள் இருவரை நானே பதவி விலகச் சொன்னேன்.
பதவி விலகும் எம்எல்ஏக்களின் வெற்றிக்கு பிரச்சாரம் செய்ய வர வேண்டும் என கேட்டுக்கொண்டேன். நேரம் வரும்போது பிரசாரத்துக்கு வருகிறேன் என முதல்வர் விஜய் சொன்னார்" என விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications