லக்கேஜ் போல.. பைக்கில் குழந்தையை பையில் போட்டு சென்ற தந்தை! பதறியடித்த வாகன ஓட்டிகள்
பெங்களூர்: குழந்தையை பாதுகாப்பாக அரவணைத்து அழைத்துச் செல்ல வேண்டிய தந்தையே, எந்தவித அக்கறையும் இல்லாதது போல, லக்கேஜ் பைக்குள் வைத்து மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் தொங்கவிட்டபடி பயணம் செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், "ஒரு நொடி தவறியிருந்தால் குழந்தையின் உயிரே போயிருக்கும்" என நெட்டிசன்களும் வேதனையுடன் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பைக்கில் லக்கேஜ்களை தொங்க விடும் இடத்தில் பை ஒன்றை மாட்டி அதற்குள் குழந்தையை போட்டுக்கொண்டு அந்த நபர் சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்த இந்த சம்பவம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பையில் குழந்தையை போட்டுக்கொண்டு
கார்நாடக மாநிலம் கடக் நகரில் உள்ள ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் பைக்கில் ஒருவர் பயணித்துக்கொண்டு இருந்தார். அவர் தனது பைக்கில் பக்கவாட்டில் பை ஒன்றை தொங்க விட்டு இருந்தார். அந்த பையில் இருந்து ஒரு சிறிய குழந்தையின் தலை மட்டும் வெளியே தெரிந்தது. இதை பார்த்த சக வாகன ஓட்டிகள் ஒரு நிமிடம் பதறிப்போயினர்..
குழந்தையின் எடையை அந்த பை தாங்குமா? என்றும், அறுந்து விழுந்து விடுமோ என்றும் வாகன ஓட்டிகள் பதறினார்களே தவிர, குழந்தையை அப்படி வைத்துக்கொண்டு சென்ற தந்தை கேஷுவலாக சென்று கொண்டிருந்தார். குழந்தையின் உயிரை பற்றி சிறிதும் அக்கறை இல்லாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திப்பு சர்க்கிளிலிருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தவறி விழுந்தால் என்ன ஆகும்?
அதிலும் இந்த சாலையில், கனரக வாகனங்கள் அதிகம் செல்லுமாம். அந்த சாலையில் இப்படி அஜாக்கிரதையாக பயணித்து கொண்டு இருந்துள்ளார். அவ்வழியே சென்றவர்கள் ஆபத்து குறித்து எச்சரித்தபோதிலும் அதை பொருட்படுத்தாமல் குழந்தையுடன் பயணத்தை தந்தை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் பைக்கை வேகமாக வேறு ஓட்டிச்சென்றார். அந்த குழந்தை பையில் இருந்து தவறி சாலையில் விழுந்தால் என்ன ஆவது? என நினைத்து அச்சப்பட்டுக்கொண்டே சக வாகன ஓட்டிகள் சென்றனர்.
நெட்டிசன்கள் கோபம்
தந்தையின் இந்த பொறுப்பற்ற செயலை பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். நெஞ்சை பதபதைக்கும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவும், புகைப்படங்களும் வைரலானதை அடுத்து தந்தையின் பொறுப்பற்ற செயலை கண்டித்து சமூக வலைதளங்களில் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நெட்டிசன் ஒருவர் கூறுகையில், இதுபோன்ற பொறுப்பற்ற முறையில் செயல்படும் நபர்கள்தான் பாதி விபத்துகளுக்கு காரணம்.. கொஞ்சம் கூட பொறுப்பில்லாத நபர் என்று பதிவிட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் இந்த நபரின் டிரைவிங் லைசன்சை ரத்து செய்ய வேண்டும் என்று பதிவிட்டு இருந்தனர்..
வீடியோ வைரலானதை தொடந்து போலீசார் பைக்கின் எண்ணை வைத்து சம்மந்தப்பட்ட நபரை தேடி வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றது அவரது தந்தை தானா.. இல்லை வேறு யாருமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த முழு விவரம் போலீசாரின் விசாரணைக்கு பிறகே தெரியவரும்.














Click it and Unblock the Notifications