இந்தியாவின் தொழில்முனைவோர்களை கண்டறிய 'வந்தே பாரதம்' இயக்கம்.. அதானியின் மெகா பிளான்
மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆன கவுதம் அதானி கடந்த 24 ஆம் தேதி தனது 64 வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாளை முன்னிட்டு அதானி குழுமம் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களும் ரத்த தான முகாம்களும் நடைபெற்றன. தனது பிறந்த நாளையொட்டி, நாட்டில் தொழில் முனைவோர்கள் மற்றும் புத்தாக்க சிந்தனை கொண்டவர்கள், மாற்றத்தை உருவாக்குபவர்கள் ஆகியோர்களை கண்டறிந்து ஆதரவு அளிக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் வந்தே பாரதம் என்ற இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். நாட்டின் அனைத்து மூலைகளிலும் உள்ள தொழில்முனைவோர்களின் திறமையைக் கண்டறிய நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள திறமையான புதுமையாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 'வந்தே பாரதம்' (Vande Bharatam) என்ற புதிய தேசிய அளவிலான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தனது 64-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார்.

புதிய யோசனை இருப்பவர்கள்
இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 800-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து திறமையான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பெரிய நகரங்களில் மட்டுமல்லாமல், சிறிய நகரங்கள், கிராமங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் இருக்கும் திறமையாளர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தில் வயது, கல்வித் தகுதி, தொழில் போன்றவற்றுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
புதிய யோசனை மட்டுமே இருப்பவர்கள், மாதிரி தயாரிப்பை (Prototype) உருவாக்கியவர்கள், தொடக்கநிலை தொழில் தொடங்கியவர்கள் அல்லது ஏற்கனவே தொழில் செய்து வருபவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். ஸ்டார்ட்அப் நிறுவனமாக பதிவு செய்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. தொழில்நுட்பம், உற்பத்தி, வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாரம்பரிய கைவினை, சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
பரிசுத் தொகை, பிற விருதுகள்
குறிப்பாக பெண்கள், பழங்குடியினர், கிராமப்புற தொழில்முனைவோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உள்ளூர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் புதுமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பங்கள் பல்வேறு கட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டு, புதுமைத்திறன், தொழில்முனைவு திறன், வளர்ச்சி வாய்ப்பு மற்றும் சமூக தாக்கம் ஆகிய அடிப்படைகளில் மதிப்பீடு செய்யப்படும். இறுதியாக தேர்வு செய்யப்படும் 75 பேர் அகமதாபாத்திற்கு அழைக்கப்பட்டு, தொழில் நிபுணர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வழிகாட்டிகளுடன் பயிற்சி மற்றும் ஆலோசனை பெறும் வாய்ப்பை பெறுவார்கள்.
பின்னர் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான இறுதிப்போட்டி நடத்தப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தொழில் வளர்ப்புக்கான ஆதரவு, வழிகாட்டுதல், முதலீட்டாளர்களுடன் தொடர்பு, தொழில் கூட்டாண்மை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்படும். பரிசுத் தொகை மற்றும் பிற விருதுகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 24 முதல் தொடங்கியுள்ளது. நடிகரும் தொழில்முனைவோருமான ராஜீவ் கண்டேல்வால், இந்த திட்டத்தின் தூதராகவும் தொகுப்பாளராகவும் செயல்பட உள்ளார்.












Click it and Unblock the Notifications